Sunday, August 1, 2021

MAHA PERIYAVAA STORIES

 

"கோனார் கை வைத்துப்  பீய்ச்சினால், பசுவுக்கு வலிக்காது. கோனாருக்கு நெளிவு சுளிவு  தெரியும். மாட்டுக்குக் கஷ்டம்னு தெரிஞ்சா, உடனே கறப்பதை நிறுத்திடுவார்."

 

    கிரீஸ் தேசத்து அரசியும்,இளவரசி ஐரீனும்  மகாபெரியவாளிடம் எல்லையில்லாத பக்தி கொண்டவர்கள்.  ஆண்டுதோறும் (விளம்பரம் இல்லாமல்) தரிசனத்துக்கு  வந்து விட்டு, மிகவும் பரவசத்துடன் திரும்பிப் போவார்கள்.

 

    ஒரு முறை, நம் நாட்டிலுள்ள குழந்தைகள்,முதியவர்கள்,  ஏழைகளுக்கு விநியோகிப்பதற்காக ஐ.நா.சபையின் ஏதோ  ஒரு துறையின் மூலம் ஏராளமான பால் பவுடர் டின்கள்  அனுப்பினார்கள்.ஸ்ரீ மடத்துக்கும் சில நூறு டின்கள் வந்தன.

 

    "ஐரீன்,பால் பவுடர் ஒரு கிலோ டின் நிறைய அனுப்பியிருக்கார்"  என்று பெரியவாளிடம் விண்ணப்பிக்கப்பட்டது."பாடசாலை

வித்யார்த்திகள் உபயோகத்துக்காக-ன்னு எழுதியிருக்கார்."

 

    சிறிது நேரத்துக்குப் பின், மேல் நாடுகளிலெல்லாம் மெஷின்  வைத்துத்தானே பால் கறக்கிறார்கள்? என்று கேட்டார்கள்  பெரியவாள்.

 

"ஆமாம்.."

 

    "பசுவுக்கு வலிக்காதோ?" என்றார்கள்,சிந்தனை தோய்ந்த  முகத்துடன். பின்னர் தொடர்ந்து, "கோனார் கை வைத்துப்  பீய்ச்சினால், பசுவுக்கு வலிக்காது. கோனாருக்கு நெளிவு-சுளிவு  தெரியும். மாட்டுக்குக் கஷ்டம்னு தெரிஞ்சா, உடனே கறப்பதை நிறுத்திடுவார்.." என்று சொன்னார்கள்.

 

    "அந்த ஊர்ப் பசு மாடுகளுக்கு மெஷின் கறவைப் பழகிப்  போயிருக்கும்..."-தொண்டர்

 

    "ஆமா! அந்த ஹிம்ஸையைப் பொறுத்துக் கொள்ளைப் பழகிப்  போயிருக்கும்...."-பெரியவா.

 

    "அங்கேயெல்லாம் மாட்டு எலும்பைப்பொடி செய்து  தீவனத்தோட கலந்து, பசு மாட்டுக்குக் கொடுக்கிறார்களாம். அதனால்தான் அங்கே பசுக்கள் புஷ்டியா இருக்கு. நிறையப்  பால் கொடுக்கிறது" என்றார் ஒரு தொண்டர்.

 

    பெரியவாள் அதிர்ச்சி அடைந்தார்கள். 'பசுக்களுக்கு எலும்புப்  பவுடர்? அசைவ உணவு?' என்று  நெஞ்சுக்குள்  சிந்தனையோட்டம்

 

    "அங்கேயெல்லாம் பால் உற்பத்தி என்பது வியாபாரப்பெருக்கத்துக்காகத்தான். பல நாள் வரை கெட்டுப் போகாதபடி,  கருங்கல் மாதிரி, வெண்ணெய் செய்கிறார்கள். பால் பவுடர்,சீஸ் என்று என்னென்னமோ தயாரித்து வெளிநாட்டுக்கு அனுப்புகிறார்கள். சுவாமிக்கு அபிஷேகம் செய்ய பஞ்சகவ்யமா  செய்யப் போகிறார்கள்?"

 

பெரியவாள் மனம் வருந்துகிறார்கள் என்பது முகக்குறியிலேயே தெரிந்தது.

 

    "அசைவத் தீனி சாப்பிடுகிற பசுமாட்டின் பாலும் அசைவம்தான். அது நமக்கு வேண்டாம். பாடசாலைப் பையன்களுக்கும்  வேண்டாம் இந்த மாதிரி உணவுகளைச் சாப்பிடுகிற மாணவர்  ஹாஸ்டல் இருக்குமே? மானேஜரைக் கேட்டுண்டு தகுந்த இடத்துக்கு அனுப்பி வை..."

 

தொண்டர் மானேஜரைக் கண்டு பேச நகர்ந்தார்.

 

"இதப் பாருடா...பால் பவுடர் டின் கிடைச்சுது. சரியானபடி  விநியோகிக்கப்பட்டது. இனிமேல் பால் பவுடர் வேண்டாம்'ன்னு  ஐரீனுக்கு எழுதச் சொல்லு..." -பெரியவா.

 

பெரியவாள் யார் மனத்தையும் புண்படுத்த மாட்டார்கள். பால் போன்ற  சைவத் தீனி உண்ணும் பசுவின் பால் போன்ற  --தூய, தெய்வீக உள்ளம்!

No comments:

Post a Comment