Friday, October 29, 2021

சக்கரத்தாழ்வானைக் கையில் உடையவன் ஆன சக்கரபாணி

 சக்கரத்தாழ்வானைக் கையில் உடையவன் ஆன சக்கரபாணி

பெருமானின் வலக்கரத்தில் எப்போதும் திகழும் சுதர்ஸனர், எல்லா வைணவ கோயிலுக்குள்ளும் பெருமானோடு காட்சி தருகிறார். 


என்றாலும், சில கோயில்களில் சுதர்ஸனருக்குத் தனி சந்நிதி உள்ளது. 

அங்கே யோக நரசிம்மராக ஒருபுறத்திலும் சுதர்ஸனராக மற்றொரு புறத்திலும் எழுந்தருளி காட்சி தருகிறார். 

அப்படிப்பட்ட கோயில்களில் சுதர்ஸனர் தனிக் கோவிலில் எழுந்தருளி காட்சி தரும் இடம் கும்பகோணம் சக்கரபாணிப்பெருமான் கோயில். மேலும் திருமோகூர். 

திருவரங்கம், காஞ்சிபுரம் போன்ற கோயில்களிலும் சக்கரத்தாழ்வார் சந்நிதிகள் அமையப் பெற்று புகழுடன் திகழ்கின்றன.

கும்பகோணம் ஸ்ரீசக்கரபாணி:

கும்பகோணம் என்று அழைக்கப்படும் திருக்குடந்தை திவ்வியதேசத்தில் தனிக் கோயிலில் சக்கரப்பாணிப் பெருமானாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார் சுதர்ஸனாழ்வார். 

உலகுக்கு ஒளிதரும் சூரியனில் ஒரு கரும் புள்ளி விழுந்தது. ஆம், அவனுக்கு அகந்தை ஏற்பட்டது. கர்வம் மிகுந்தது. 

அபரிமிதமான பிரகாசத்தாலும் தன்னைப் பற்றிய கர்வம் மிகுந்தது. சூரியனுக்கு ஏற்பட்ட அகந்தையால், அவன் மற்றவருக்குத் துன்பம் இழைக்கலானான். 

அபரிமிதமான வெப்பத்தால்; தேவர்களையும் மற்ற உயிரினங்களையும் கோள்களையும் தகிக்கத் தொடங்கினான்.

சூரியனின் வெப்பத்தைத் தாள முடியாமல் எல்லோரும் மகாவிஷ்ணுவிடம் பிரார்த்தித்தனர். 

இதனால் சூரியனுக்கு ஏற்பட்ட பின்னடைவைப் போக்க எண்ணினார் விஷ்ணு. ஆனால் அதை எப்படிச் செயல்படுத்துவது? 

தீமைகள் மலியும்போது அவதரித்து அந்தத் தீமையைக் களைவேன் என்றான் பகவான். துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனம் என்ற வகையில், தீயவனை அழித்து, நல்லவனைக் காப்பது என்பது அவன் விரதம். 

இப்போது தீமை முளைத்துள்ளது. ஆனால் அந்தத் தீமையைச் செய்பவன் சூரியன். அவன் ஒன்றும் தீயவன் இல்லையே. 

உலகுக்குப் பயன் தருவதற்காகப் படைக்கப்பட்டவனல்லவா? ஆகவே அவன் அழிக்கப்பட்ட வேண்டியவனல்லன்; அவனுடைய அகந்தை குணம்தானே அழிக்கப்பட்ட வேண்டியது?

இங்கே சூரியனும் பகவானின் ஆணைப்படி இயங்குபவனாயிற்றே. அதனால் சூரியனுக்குப் புத்தி புகட்ட தன் அதிகாரி ஒருவனிடம் ஒப்படைத்தார் பகவான். அந்த அதிகாரி சக்கரத்தாழ்வார். 

தன்னிடம் பிரார்த்தனை செய்த தேவர்களிடம் பெருமான் கூறினான்; எம்திருவாழிக்கு இந்தப் பணியைக் கொடுத்திருக்கிறோம். இப்போது ஜலந்தராசுரன் என்ற அசுரனை அடக்க சுதர்ஸனரைப் பூலோகத்துக்கு அனுப்பியுள்ளேன். 

நீங்கள் அனைவரும் பிரம்மாவுடன் பூலோகத்தில் உள்ள காவிரிகரைக்குச் சென்று சுதர்ஸனரைத் தியானம் செய்யுங்கள். 

சுதர்ஸனர் உங்களுக்குக் காட்சிதந்து உங்கள் கோரிக்கையை நிறைவேற்றி வைப்பார் என்று அருள் செய்தார். அப்படி அவர் காட்டிய காவிரிதீரம் கும்பகோணம்.

பகவான் விஷ்ணுவின் ஆணைப்படியே, பிரம்மா முதலானோர் காவிரிக்கரையில் பிரார்த்தனை செய்தனர். சுதர்ஸனர் தோன்றினார். அவரிடம் தங்கள் கோரிக்கையை முன்வைத்தனர். 

ஊழியர் மீதான ஒழுங்கு நடவடிக்கைபோல், சுதர்ஸனர் சூரியனிடம் இருந்து ஒளியைக் கவர்ந்து, அதை மறைத்துச் சூரியனை சஸ்பெண்ட் செய்தார். 

அவ்வளவுதான்! சூரியனின் மமதை இருந்த இடம் தெரியாமல் போனது. தன்னால் ஒன்றும் இல்லாது என்பதை உணர்ந்த சூரியன், சுதர்ஸனாழ்வாரிடம் மன்னிப்பு கேட்டான்.

அப்போது சுதர்ஸனர், சூரியதேவா, நீயும் உன் போன்ற பிரபஞ்ச சக்திகளும் உலக நலன்களுக்காகவே படைக்கப்பட்டிருக்கிறீர்கள். 

அதற்காக உங்களுக்கு அளிக்கப்பட்ட சக்திகள் உங்களுடையவை அல்ல. எல்லாம் வல்ல பரம்பொருளினுடையது. பரம்பொருளே அந்தச் சக்தியை உங்களின் மூலமாக உலகுக்குக் கொடுக்கிறது. 

ஆனால் நீங்களோ உரிமையாளன் போல் செருக்குறுதல் தகுமா? அப்படிச் செருக்குற்றால், உங்கள் சக்தியைப் பரம்பொருள் மீண்டும் எடுத்துக்கொள்ளும் என்று சொன்னார்.

தன் நிலை நினைத்து வருந்திய சூரியன், அவரைப் பணிந்து மீண்டும் அந்தச் சக்தியைத் தர வேண்டினான். அவன் வேண்டியபடிச் சூரியனுக்கு அந்தச் சக்தியை வழங்கினார் சுதர்ஸனர். 

சுதர்ஸனர் கூறிய பரம்பொருள் யார் என்று தெரிந்து கொள்வதில் சூரியனுக்கு ஆர்வம் ஏற்பட்டது. அதை வாயுவிட்டுக் கேட்டே விட்டான் சூரியன். சுதர்ஸனர் சொன்னார்; நீயும் உன் காரணமாக உலகமும் உணர்ந்துகொள்ள அந்தப் பரம்பொருள் என்னில் காட்சி தருவார் என்றார். 

உடனே அங்கே கோடி சூரியப் பிரகாசத்தோடு சக்கரம் பிரம்மாண்டமாக விரிவடைந்து. அதில் விஸ்வரூபியாகப் பெருமான் காட்சி தந்தார். அந்தக் காட்சியைப் என்றென்றும் வணங்க, மக்கள் அவரைத் திருக்கோயிலில் பிரதிஷ்டை செய்து பூஜித்து வந்தார்கள்.

 இன்றும் இந்தக் கோலத்தில் சுதர்ஸனாழ்வார் சேவை சாதிக்கக் காண்கிறோம். சாரங்கபாணிப் பெருமானால் அனுப்பி வைக்கப்பெற்ற சக்கரத்திலிருந்து சக்கரராஜனாக மூன்று திருக்கண்களுடன், எட்டுக் கைகளுடன், அக்னி மயமான கேசத்துடன் (ஜ்வாலாகேசம்) தோன்றி, ஆதவனின் ஆணவத்தை அடக்கி திரும்பவும் சூரியனுக்கு ஒளி தந்து, திவ்விய அருளுடன் திருக்காட்சி அளிக்கிறார். 

ஆதவனே சக்கரராஜனுக்குத் தனி கோயிலை நிர்மானித்து, பல உற்சவங்களை நடத்தி வருவதால் திருக்குடந்தை (கும்பகோணம்) பாஸ்கர க்ஷேத்திரம் எனச் சிறப்புடன் அழைக்கப்படுகிறது. 

இன்றும் காவிரியில் சக்கர தீர்த்தம் என்ற சக்கரப் படித்துறையில் உற்சவங்கள் முடிந்ததும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி கண்டருள்கிறார்.

எல்லாக் கோள்களுக்கும் நாயகனான அந்தச் சூரியனே, இந்தத் தலத்தின் பெருமானிடத்தல் சரணாகதி அடைந்து பயன் அடைந்ததால், இந்தச் சக்கரராஜனைத் தூயமனத்துடன் வழிபடும் அடியார்களின் எல்லாத் துன்பங்களும் சகல கிரக தோஷங்களும் விலக்கப்பட்டு, பிரார்த்தனைகளும் நிறைவேற்றப்படுகின்றன என்பதை இன்றும் நேரடியாகக் காணலாம். 

சக்கரராஜனுக்குத் திருத்துழாய் புஷ்பங்களோடு வில்வ அர்ச்சனையும் குங்கும அர்ச்சனையும் செய்யப்படுவது தனிச்சிறப்பு. 

திருமாலின் மேன்மையை, தெளிவாகத் தம்முடைய பாசுரங்கள் மூலம் நிலைநாட்டியவர், சக்கரத்தாழ்வாரின் அம்சமாக அவதரித்த திருமழிசைப்பிரான். 

இவர் பரமனின் ஆழியைத் தரித்த ஆழியானாகத் திருவுள்ளம் கொண்டு, அமரர்கள் அதிபதியாகக் கண்டு நிரூபித்தார். அவர் அருளிய திருப்பாசுரங்களில் ஒன்று.

தூய்மை யோகம் ஆயினாய் துழாய் அலங்கள் மாலையாய்
ஆமையாகி ஆழ்கடல் துயின்ற ஆதி தேவ! நின்
நாம தேயம் இன்ன தென்ன வல்ல மல்ல மாகிலும்
சாம் வேத கீதனாய் சக்ரபாணியில்லையே

 சக்கரத்தாழ்வானைக் கையில் உடையவன் ஆனதால் சக்கரதாரி, சக்கரபாணி எனும் திருநாமங்களையும் பெற்றுள்ளார் திருமால். திருக்குடந்தையில் ஆழியாழ்வான் அம்சம் கொண்டு அரிச்சாவதாரமாகக் கோயில் கொண்டுள்ள சக்கரபாணியைப் போற்றும் பாசுரம்.

தோடவிழ் நிலம் மணங்கொடுக்கும்
ஆழ்புனல் சூழ்குடந்தைக் கிடந்த
சேடர்கொல் என்று தெரிக்கமாட்டேன்
செஞ்சுடராழியும் சங்கமுமேந்திப்
பாடகமெல்லடியார் வணங்கப்
பன்மணி முத்தோடிலங்கு சோதி
ஆடகம் பூண்டொரு நான்குதோளும்
அச்சோ ஒருவர் அழகியவர்.

தன் பக்தனின் கடனை அடைத்த. அம்பிகை....!

 தன் பக்தனின் கடனை அடைத்த. அம்பிகை....!


அந்த தேவி உபாசகர் ஒரு முறை, செல்வந்தர் ஒருவரிடம் பணம் கடன் வாங்கி , குறிப்பிட்ட காலத்தில் திருப்பி தருவதாக பத்திரம் எழுதி கையொப்பமும் இட்டிருந்தார் ....


.ஆனால் அவரால் குறித்த காலத்தில் கடனை திருப்பி தர இயலவில்லை !...


ஒரு நாள் அவர் பூஜையறையில் அம்பிகையை தியானித்தவாறு பூஜையில் ஆழ்ந்திருந்த அக்கணம் .


கடன் கொடுத்த அந்த செல்வந்தர் அவர் வீட்டு வாசலில் வந்து அவர் பெயரை சொல்லி அழைக்க ....


அந்த தேவி உபாசகர் வெளியே வராததால் ...கோபம் கொண்ட செல்வந்தர் அவரை வாயில் வந்தபடி திட்டி கூச்சல் போட. ஆரம்பித்தார் !


அப்போது உள்ளிருந்து அந்த தேவி உபாசகரின் மனைவி வெளியே வந்து  

" உங்களுக்கு பணம் தானே வேண்டும் ? ..கூச்சல் போடாதீர்கள் !..அரை நொடியில் பணத்துடன் வருகிறேன் ...''


மிிடுக்காக சொல்லி விட்டு வேகமாக அங்கிருந்து விரைந்தவள் , சொல்லி வைத்தாற்போல் அரை நொடியில் வந்தாள் , ஒரு சிறு பை சகிதம் .;

..பின் புன்னகையுடன் அந்த பையை அவரிடம் நீட்டியவாறே,


'' இதோ பாருங்கள் ..இந்த பையில் நீங்கள் கடனாக கொடுத்த பணமும் அதற்குண்டான , வட்டியும் உள்ளன !


.பூஜை முடிந்ததும் நீங்கள் அவர் கையினால் பிரசாதம் பெற்றுக்கொண்டு ,பின் இந்த பத்திரத்தையும் அவரிடமே கொடுத்து விடுங்கள் ! ''....


புன்னகை மாறாத முகத்துடன் சொல்லி விட்டு அந்த அம்மாள் உள்ளே செல்ல ..


செல்வந்தரும் பை, பத்திரம் சகிதம் வீட்டுதிண்ணையிலேயே அமர்ந்து கொண்டார் ..


சற்ற்றைக்கெல்லாம் பிரசாத தட்டுடன் வெளியே வந்த அந்த தேவி உபாசகர் , அங்கே அமர்ந்திருந்த செல்வந்தரை கண்டு வியப்பு மேலிட ,


'' அடடே ...உங்களை கவனிக்க வில்லை ....மன்னியுங்கள் ! ''

பிரசாத தட்டை நீட்டியவாறு மெல்லிய குரலில் பேசியவரை பேச விடவில்லை அந்த செல்வந்தர் ..


'' முதலில் இந்த பத்திரத்தை வாங்கி கொள்ளுங்கள் ! ''...

அவரின் வார்த்தைகள் கேட்டு தேவி உபாசகருக்கு ஏகத்துக்கு ஆச்சரியம் !.புருவம் முடிச்சிட , 


.'' நான் இன்னும் உங்கள் கடனை அடைக்கவில்லையே ?..''

'பரிதாமாக கூறியவரை புன்னகையுடன் ஏறிட்டார் செல்வந்தர் ;


'' உங்கள் மனைவி சற்று முன்பு வந்து மொத்த கடனையும் அடைத்துவிட்டு , பத்திரத்தையும் உங்களிடம் கொடுக்க சொன்னார் !''


ஆச்சரியத்தில் ஆழ்ந்த தேவி உபாசகர் , பின் மனைவியை அழைத்து , 


'' நீ இவரது கடனை அடைத்ததாக கூறுகிறாரே ...உண்மையா ?.....''

என்று வினவ ....


அந்த அம்மையாரோ திகைப்புடன் ,


'' அய்யோ ...நான் பூஜையறையில் உங்களுடன் தானே இருந்தேன்...?..இது எப்படி சாத்தியம் ? ''


என்று அரற்றிய அக்கணம் ...


பூஜையறையிலிருந்து ஒரு அசரீரி !

'' நான் தான் பணம் கொடுத்தேன் !''..

குரல் கேட்டு பூஜையறைக்கு அனைவரும் விரைய,


அங்கே அம்பிகையின் உருவத்தை தவிர வேறு எதுவும் இல்லை!


இப்போது சகலமும் புரிந்து போயிற்று அந்த தேவி உபாசகருக்கு ;

கடனை அடைக்க , தன் மனைவி உருவில் வந்தது சாட்ஷாத் அம்பிகையே என்றுணர்ந்த அவரின் கண்களில் இப்போது தாரை தாரையாய் கண்ணீர் ! அருகே திக்பிரமையுடன் அவரது மனைவி !


'' உங்கள் மேன்மை தெரியாமல் தவறாகபேசிவிட்டேன் ...

மன்னியுங்கள் !'' கண்கள் பனிக்க , செல்வந்தர் அவரின் கால்களில் விழுந்தார் !


அந்த தேவி உபாசகர் வேறு யாருமில்லை ..

லலிதா சஹஸ்ரநாமத்திற்கு பாஷ்யம் எழுதிய பாஸ்கரராயர்  தான் ! 


அவரின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம் இது ! 


தஞ்சை மாவட்டம் திருவாலங்காட்டுக்கு அருகே ,காவேரி ஆற்றங்கரையில் வசித்தவர் இவர் ! 


தஞ்சாவூர் மயிலாடுதுறை மார்க்கத்தில் , பாஸ்கர ராயபுரம் என்று ஒரு ஊர் இவர் பெயராலேயே இருக்கிறது.!

மழலைவரம் : பலன் தரும் பதிக வழிபாடு

 மழலைவரம் : பலன் தரும் பதிக வழிபாடு

கோதானம்(பசுக்கொடை), பூதானம் (நிலக்கொடை), வஸ்திரதானம் (உடைக்கொடை), அன்னதானம் (உணவுக்கொடை), சொர்ணதானம் (பொற்கொடை) உள்ளிட்ட எந்த தானத்தை வேண்டுமென்றாலும் நாம் இன்னொருவருக்குச் செய்துவிடலாம். ஆனால், சந்தானம் என்பதை இறைவனால் மட்டும்தான் நமக்குத் தரமுடியும். எனவே, தானங்களிலேயே சிறந்த தானம் சந்தானம்; அதாவது குழந்தைப்பேறு.எவ்வளவு செல்வம் இருந்தாலும் அதை அனுபவிக்க மக்கட்ெசல்வம் என்ற ஒன்று வேண்டும்.



பத்து திசைகளிலும் தேர் நடத்தி தனிப்பெயர் பெற்ற தசரதன் தனக்குக் குழந்தை வேண்டும் என்பதற்காக புத்திரகாமேஷ்டி யாகத்தை செய்து குழந்தை பெற்றார். பதினாறு வயது வாழ்ந்தாலும் போதுமென்று மகேஸ்வரனை வேண்டி மார்க்கண்டேயனை பெற்றெடுத்தார் மிருகண்டு முனிவர். இவ்வாறு அனைவரும் விரும்பும் அரியசெல்வம் மழலைச் செல்வம்.மனித வாழ்வில் மனையறத்தின் மாட்சிமையே நன்மக்களைப் பெறுதலில்தான் இருக்கிறது என்பதை,‘‘மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கட் பேறு’’ என்று குறிப்பிடுகிறார் திருவள்ளுவர்.


இல்லறத்தான் ஒருவனுக்கு இன்றியமையாத செல்வம் குழந்தைச் செல்வம். அதனால் தான் பதினாறு வகைச் செல்வங்களை சொன்ன அபிராமி பட்டர் குழந்தைச் செல்வத்தை சொல்லும்போது மட்டும் எவருக்கும் குழந்தைச் செல்வம் மட்டும் தவறிவிடக் கூடாது என்பதற்காக, ‘‘தவறாத சந்தானமும்’’ என்று தவறாமல் குறிப்பிடுகிறார்.நல்லதொரு குழந்தைப்பேறு வாய்க்க தசரதரைப் போன்று யாகமோ, மிருகண்டு முனிவரைப் போன்று தவமோ நம்மால் செய்ய முடியுமா? என்றால் அது சற்று அரிதுதான். ஆனால், எளிமையாக வழிபாடு செய்ய முடியும். அதற்கு நாம் செல்ல வேண்டிய கோயில் ஒன்று இருக்கிறது.


அங்கு சென்று பரிகாரம் செய்ய வேண்டியதில்லை; பதிகம் பாடினால் போதும். ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டியதில்லை; அங்குள்ள குளத்தில் குளித்தால் போதும். அதனால் நிச்சயமாய் குழந்தைப் பேறு வாய்க்கும். அதன் பொருட்டு கட்டுக்கதையாக இல்லாமல் அனுபவத்தில் நம் முன்னோர் கண்டதைத்தான் இக்கட்டுரையில் நாம் காண இருக்கிறோம்.திருமணமாகி குழந்தைப்பேறு வாய்க்காத தம்பதியர் பலர் இருக்கின்றனர். இவர்கள் யாரோ சொன்ன பரிகாரங்களைச் செய்வதை விடவும் நம் முன்னோர் அனுபவ ரீதியாகக் கண்ட மரபார்ந்த வழிபாடுகளைச் செய்வதன்மூலம் பிள்ளை வரத்தைப் பெறமுடியும் இது திண்ணம்.


‘திருப்பெண்ணாகடம்’ என்ற ஊரில் அச்சுத களப்பாளர் என்பவர் மங்களாம்பிகை என்ற மங்கையை மணம்செய்து வாழ்ந்து வந்தார். நீண்ட நாட்களாகியும் குழந்தைப் பேறு இல்லாத காரணத்தால் என்ன செய்வது என்று தெரியாமல், திருத்துறையூரில் வாழ்ந்த சகலாகமப் பண்டிதரான அருள்நந்தி சிவாச்சாரியாரிடத்தில் தங்களின் குறையைக் கூறி மன்றாடினர். அப்போது அவர், மன்றுள் ஆடும் மகாதேவனை வணங்கி, தெய்வத்தமிழ்த் திருமுறை ஏட்டில் கயிறிட்டுப் பார்த்தார். அப்போது திருஞானசம்பந்தப் பெருமான் திருவாய் மலர்ந்தருளிய,


‘‘பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோடு உள்ள நினைவு


ஆயினவே வரம்பெறுவர் ஐயுற வேண்டா ஒன்றும்


வேயனதோள் உமைபங்கள் வெண்காட்டு முக்குளநீர்


தோய்வினையார் அவர்தம்மைத் தோயாவாம் தீவினையே’’


என்ற பாடல் வந்தது.


உடனே, அந்த சிவாச்சாரியார் இந்தப் பதிகம் பாடல்பெற்ற தலமாகிய திருவெண்காட்டுக்கு அச்சுத களப்பாளரையும் மங்களாம்பிகையையும் சென்று சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம் (தேவி கோயில் தீர்த்தம்) மற்றும் அக்னிதீர்த்தம் ஆகிய மூன்று குளங்களிலும் நீராடி, பதிகத்தை முழுமையாக மனமுருகிப் பாராயணம் செய்து பரமனை வணங்கிவரச் சொன்னார்.


சிவாச்சாரியாரின் சொற்படி அவர்களும் வெண்காடு சென்று, முக்குளத்தில் நீராடி, ‘‘கண்காட்டு நுதலானும்’’ என்று தொடங்கும் அருட்பதிகத்தை ஆர்வத்துடன் பாராயணம் செய்து, அங்கு அருள் நல்கும் சுவதாரண்யேஸ்வரர் எனும் வெண்காட்டீசரை வழிபாடு செய்தார்கள்.


அன்றிரவே ஆண்டவன் அச்சுத களப்பாளரின் கனவில் எழுந்தருளி, ‘‘இப்பிறவி யில் உமக்கு பிள்ளைப்பேறு வாய்க்க வாய்ப்பில்லை. ஆனால், நம் பிள்ளையாகிய ஞானசம்பந்தனின் ஞானத்தமிழ்ப்


பதிகத்தைப் பாராயணம் செய்த காரணத்தால் உமக்கு நாம் நல்ல குழந்தைச் செல்வத்தைத் தந்தோம்’’ என்று அருள்செய்து மறைந்தார்.அதைக்கேட்ட அச்சுத களப்பாளர் ஆனந்தத்தின் எல்லைக்கே சென்று நடந்ததை தன்னுடைய மனைவியாரிடத்தில் சொல்லி மகிழ்ந்தார்.


அன்று தொடங்கி சரியாக பத்தாவது திங்களில் ஞானசம்பந்த பிள்ளையப் போன்றே ‘சுவேதனப்பெருமான்’ என்ற ஞானக் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைதான் சந்தானக் குரவர்கள் நால்வருள் முதல்வராக இருக்கக்கூடிய மெய்கண்டார். அவர் அருளிய சிவஞானபோதம்தான் சைவ சித்தாந்த சாத்திரங்களுள் முதன்மையாகப் போற்றப்படுகிறது. சைவ சமயத்தின் முடி மணியாகத் திகழக்கூடிய இந்த சித்தாந்தம் பிறப்பதற்கும் இதற்குக் காரணமாக மெய்கண்டார் பிறப்பிற்கும் காரணமாக அமைந்தது திருவெண்காட்டில் அச்சுத களப்பாளரும் அவருடைய மனைவியாரும் செய்த வழிபாடுதான். இதனை நினைவு கூறும் வகையில் அங்குள்ள சந்திர தீர்த்தத்திற்கு அருகில் மெய்கண்டாரின் ஆலயம் தற்போதும் காணப்படுகின்றது.


அந்த வகையில் நாமும் நம்முடைய பெரியவர்கள் கண்ட அனுபவத்தை வெறும் வரலாறாக மட்டுமே பார்க்காமல் நம் வாழ்க்கையில் செயல்படுத்தலாம். அவ்வாறு பல தம்பதிகள் இந்தக் கோயிலுக்கு சென்று இப்படி வழிபாடு செய்ததால் குழந்தைப்பேறு பெற்றுள்ளனர். ஆகவே, நாமும் நல்ல குழந்தைப்பேறு பெற வேண்டுமென்றால் இந்தத் திருக்கோயிலுக்கு சென்று வழிபாடு நிகழ்த்த வேண்டும்.


மயிலாடுதுறையிலிருந்து மங்கைமடம் செல்லும் வழியில் அமைந்துள்ள இத்திருத் தலமானது சோழநாட்டு காவிரி வடகரைத் தலங்களில் பதினொன்றாவது தலமாக இடம் பெற்றுள்ளது. மூன்று மூர்த்திகள் (சுவேதாரண்யேஸ்வரர், அகோரர், ஆடல்வல்லான்) மூன்று தலமரங்கள் (வில்வம், கொன்றை, ஆல்) மூன்று தீர்த்தங்கள் (சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம்), மூவரும் தேவாரம் பாடிய பெருமை என்று சிறந்து விளங்கும் இத்திருத்தலம்தான் நவகிரகங்களில் ஒன்றான புதனுக்குரிய திருத்தலமாகவும் திகழ்கிறது.


‘ஆதி சிதம்பரம்’ என்று அழைக்கப்படும் இத்தலத்தில் வெள்ளானை வழிபட்டதை, ‘‘வெள்ளானை வேண்டும் வரம் கொடுக்கும் வெண்காடு மேவிய விகிர்தனாரே’’ என்று அப்பரடிகள் பாடுவதாலும் தேவர் தலைவனான தேவேந்திரன் பூசித்ததை, ‘‘விண்ணவர்கோன் வழிபட’’ என்று சம்பந்தர் பாடுவதாலும் அறியலாம். பட்டினத்தாருக்கு இவ்வூரின் பெயரால் ‘திருவெண்காடர்’ என்ற ஒரு திருப்பெயருண்டு. ‘முக்தி வெண்காடு, முக்தி நகர், முக்தி வாயில்’ என்றெல்லாம் இத்தலம் போற்றப்படுகிறது.


சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் சூரியகுண்டம் மற்றும் சோமகுண்டம் ஆகிய இரண்டும் இத்தலத்திலுள்ள சூரிய, சந்திர தீர்த்தங்கள் தான் என்று உரை செய்கிறார் தமிழ்த்தாத்தா உ.வே சாமிநாதையர். மேலும், பெரியபுராணத்தில் இடம் பெற்றுள்ள சிறுத்தொண்டை நாயனாரின் மனைவியார் இந்த ஊரைச் சார்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி பல சிறப்புக்கள் பொருந்திய தலத்தை அடைந்து நாமும் முறையாக முக்குளத்தில் நீராடி, சம்பந்தப் பெருமானின் பதிகத்தை எண்ணம், சொல், செயல் மூன்றும் ஒன்றாகப் பாடி இறைவனை வழிபட, மெய்கண்டாரைப் போன்ற குழந்தைப்பேறு கட்டாயமாக வாய்க்கும். வழிபடுவோம்.


பாட வேண்டிய திருப்பதிகம்


திருச்சிற்றம்பலம்


‘‘கண்காட்டு நுதலானுங்


கனல்காட்டுங் கையானும்


பெண்காட்டும் உருவானும்


பிறைகாட்டுஞ் சடையானும்


பண்காட்டும் இசையானும்


பயிர்காட்டும் புயலானும்


வெண்காட்டில் உறைவானும்


விடைகாட்டுங் கொடியானே.


பேயடையா பிரிவெய்தும்


பிள்ளையினோ டுள்ளநினை


வாயினவே வரம்பெறுவர்


ஐயுறவேண் டாவொன்றும்


வேயனதோ ளுமைபங்கன்


வெண்காட்டு முக்குளநீர்


தோய்வினையா ரவர்தம்மைத்


தோயாவாந் தீவினையே.


மண்ணொடுநீ ரனல்காலோ


டாகாயம் மதிஇரவி


எண்ணில்வரு மியமானன்


இகபரமு மெண்டிசையும்


பெண்ணினொடாண் பெருமையொடு


சிறுமையுமாம் பேராளன்


விண்ணவர்கோன் வழிபடவெண்


காடிடமா விரும்பினனே.


விடமுண்ட மிடற்றண்ணல்


வெண்காட்டின் தண்புறவின்


மடல்விண்ட முடத்தாழை


மலர்நிழலைக் குருகென்று


தடமண்டு துறைக்கெண்டை


தாமரையின் பூமறையக்


கடல்விண்ட கதிர்முத்த


நகைகாட்டுங் காட்சியதே.


வேலைமலி தண்கானல்


வெண்காட்டான் திருவடிக்கீழ்


மாலைமலி வண்சாந்தால்


வழிபடுநன் மறையவன்றன்


மேலடர்வெங் காலனுயிர்


விண்டபினை நமன்தூதர்


ஆலமிடற் றான் அடியார்


என்றடர அஞ்சுவரே.


தண்மதியும் வெய்யரவுந்


தாங்கினான் சடையினுடன்


ஒண்மதிய நுதலுமையோர்


கூறுகந்தான் உறைகோயில்


பண்மொழியால் அவன்நாமம்


பலவோதப் பசுங்கிள்ளை


வெண்முகில்சேர் கரும்பெணைமேல்


வீற்றிருக்கும் வெண்காடே.


சக்கரமாற் கீந்தானுக்கு


சலந்தரனைப் பிளந்தானும்


அக்கரைமே லசைத்தானும்


அடைந்தயிரா வதம்பணிய


மிக்கதனுக் கருள்சுரக்கும்


வெண்காடும் வினைதுரக்கும்


முக்குளம்நன் குடையானும்


முக்கணுடை இறையவனே.


பண்மொய்த்த இன்மொழியாள்


பயமெய்த மலையெடுத்த


உன்மத்தன் உரம்நெரித்தன்


றருள்செய்தான் உறைகோயில்


கண்மொய்த்த கருமஞ்ஞை


நடமாடக் கடல்முழங்க


விண்மொய்த்த பொழில்வரிவண்


டிசைமுரலும் வெண்காடே.


கள்ளார்செங் கமலத்தான்


கடல்கிடந்தான் எனஇவர்கள்


ஒள்ளாண்மை கௌற்கோடி


உயர்ந்தாழ்ந்தும் உணர்வரியான்


வெள்ளானை தவஞ்செய்யும்


மேதகுவெண் காட்டாவென்(று)


உள்ளாடி உருகாதார்


உணர்வுடைமை உணரோமே.


போதியர்கள் பிண்டியர்கள்


மிண்டுமொழி பொருளென்னும்


பேதையர்கள் அவர்பிறிமின்


அறிவுடையீர் இதுகேண்மின்


வேதியர்கள் விரும்பியசீர்


வியன்திருவெண் காட்டானென்


றோதியவர் யாதுமொரு


தீதிலரென் றுணருமினே.


தண்பொழில்சூழ் சண்பையர்கோன்


தமிழ்ஞான சம்பந்தன்


விண்பொலிவெண் பிறைச்சென்னி


விகிர்தனுறை வெண்காட்டைப்


பண்பொலிசெந் தமிழ்மாலை


பாடியபத் திவைவல்லார்


மண்பொலிய வாழ்ந்தவர்போய்


வான்பொலியப் புகுவாரே’’.

ஸ்ரீ தட்சிணாமூர்த்தி 108 போற்றிகள்

 ஸ்ரீ தட்சிணாமூர்த்தி 108 போற்றிகள்


வாழ்வில் வளங்கள் அள்ளி வழங்க வியாழன் மட்டும் அல்ல எல்லா நாட்களிலும் வழிபட வேண்டிய சிவபெருமானின் ஓர் அம்சம்!இவர் வேறு! நவகிரக சுபகிரகம் குருபகவான் வேறு   !

SRI DAKSHINAMOORTHY SWAMY
SRI DAKSHINAMOORTHY


1. ஓம் அறிவுருவே போற்றி

2. ஓம் அழிவிலானே போற்றி

3. ஓம் அடைக்கலமே போற்றி


 4. ஓம் அருளாளனே போற்றி

5. ஓம் அல்லல் அறுப்பவனே போற்றி

6. ஓம் அடியாரன்பனே போற்றி

7. ஓம் அகத்துறைபவனே போற்றி

8. ஓம் அகந்தையழிப்பவனே போற்றி

9. ஓம் அற்புதனே போற்றி

10. ஓம் அபயகரத்தனே போற்றி


11. ஓம் ஆன்கீழமர்ந்தவனே போற்றி

12ஓம் ஆன்மீகநாதனே போற்றி

13. ஓம் ஆச்சாரியனே போற்றி

14. ஓம் ஆசாரக்காவலே போற்றி

15. ஓம் ஆக்கியவனே போற்றி

16. ஓம் ஆதரிப்பவனே போற்றி

17. ஓம் ஆதி பகவனே போற்றி

18. ஓம் ஆதாரமே போற்றி

19. ஓம் ஆழ்நிலையானே போற்றி

20. ஓம் ஆனந்த உருவே போற்றி

21. ஓம் இருள் கொடுப்பவனே போற்றி

22. ஓம் இருமை நீக்குபவனே போற்றி

23. ஓம் இசையில் திளைப்பவனே போற்றி

24. ஓம் ஈடேற்றுபவனே போற்றி

25. ஓம் உய்யவழியே போற்றி

26. ஓம் ஊழிக்காப்பே போற்றி

27. ஓம் எந்தையே போற்றி

28. ஓம் எளியோர்க்காவலே போற்றி

29. ஓம் ஏகாந்தனே போற்றி

30. ஓம் ஏடேந்தியவனே போற்றி

31. ஓம் ஒளிப்பிழம்பே போற்றி


32. ஓம் ஓங்கார நாதமே போற்றி

33. ஓம் கயிலை நாதனே போற்றி

34. ஓம் கங்காதரனே போற்றி

35. ஓம் கலையரசே போற்றி

36. ஓம் கருணைக்கடலே போற்றி

37. ஓம் குணநிதியே போற்றி

38. ஓம் குருபரனே போற்றி

39. ஓம் சதாசிவனே போற்றி

40. ஓம் சச்சிதானந்தமே போற்றி

41. ஓம் சாந்தரூபனே போற்றி


42. ஓம் சாமப்பிரியனே போற்றி

43. ஓம் சித்தர் குருவே போற்றி

44. ஓம் சித்தியளிப்பவனே போற்றி

45. ஓம் சுயம்புவே போற்றி

46. ஓம் சொற்பதங்கடந்தவனே போற்றி

47. ஓம் ஞானமே போற்றி

48. ஓம் ஞானியே போற்றி

49. ஓம் ஞானநாயகனே போற்றி

50. ஓம் ஞானோபதேசியேபோற்றி

51. ஓம் தவசீலனே போற்றி


52. ஓம் தனிப்பொருளே போற்றி

53. ஓம் திருவுருவே போற்றி

54. ஓம் தியானேஸ்வரனே போற்றி

55. ஓம் தீரனே போற்றி

56. ஓம் தீதழிப்பவனே போற்றி

57. ஓம் துணையே போற்றி

58. ஓம் தூயவனே போற்றி

59. ஓம் தேவாதிதேவனே போற்றி

60. ஓம் தேவருமறியா சிவனே போற்றி

61. ஓம்நன்னெறிக்காவலே போற்றி


62. ஓம் நல்யாக இலக்கே போற்றி

63. ஓம் நாகப்புரியோனே போற்றி

64. ஓம் நான்மறைப்பொருளே போற்றி

65. ஓம் நிலமனே போற்றி

66. ஓம் நிறைந்தவனே போற்றி

67. ஓம் நிலவணியானே போற்றி

68. ஓம் நீறணிந்தவனே போற்றி

69. ஓம் நெற்றிக்கண்ணனே போற்றி

70. ஓம் நோய் தீர்ப்பவனே போற்றி

71. ஓம் பசுபதியே போற்றி


72. ஓம் பரப்பிரம்மனே போற்றி

73. ஓம் பிரம்மச்சாரியே போற்றி

74. ஓம் பிறப்பறுப்போனே போற்றி

75. ஓம் பேறளிப்பவனே போற்றி

76. ஓம் பேசாமற்றெளிவிப்பேன் போற்றி

77. ஓம் பொன்னம்பலனே போற்றி

78. ஓம் போற்றப்படுவனே போற்றி

79. ஓம் மறைகடந்தவனே போற்றி

80. ஓம் மறையாப் பொருளே போற்றி

81. ஓம் மஹேசுவரனே போற்றி


82. ஓம் மங்கலமளிப்பவனே போற்றி

83. ஓம் மலைமுகட்டிருப்பவனே போற்றி

84. ஓம் மாமுனியே போற்றி

85. ஓம் மீட்பவனே போற்றி

86. ஓம் முன்னவனே போற்றி

87. ஓம் முடிவிலானே போற்றி

88. ஓம் முக்கண்ணனே போற்றி

89. ஓம் மும்மலமறுப்பவனே போற்றி

90. ஓம் முனீஸ்வரனே போற்றி

91. ஓம் முக்தியளிப்பவனே போற்றி


92. ஓம் மூலப்பொருளே போற்றி

93. ஓம் மூர்த்தியே போற்றி

94. ஓம் மோஹம் தீர்ப்பவனே போற்றி

95. ஓம் மோன சக்தியே போற்றி

96. ஓம் மௌன உபதேசியே போற்றி

97. ஓம் மேதா தட்சணாமூர்த்தியே போற்றி

98. ஓம் யோக நாயகனே போற்றி

99. ஓம் யோக தட்சணாமூர்த்தியேபோற்றி

100. ஓம் யம பயமழிப்பவனே போற்றி

101. ஓம் ருத்திரப்பிரியனே போற்றி


102. ஓம் ருத்திராட்சம் பூண்டவனே போற்றி

103. ஓம் வித்தகனே போற்றி

104. ஓம் விரிசடையனே போற்றி

105. ஓம் வில்வப்பிரியனே போற்றி

106. ஓம் வினையறுப்பவனே போற்றி

107. ஓம் விஸ்வரூபனே போற்றி

108. ஓம் தட்சணா மூர்த்தியே போற்றி போற்றி!