Friday, October 29, 2021

சக்கரத்தாழ்வானைக் கையில் உடையவன் ஆன சக்கரபாணி

 சக்கரத்தாழ்வானைக் கையில் உடையவன் ஆன சக்கரபாணி

பெருமானின் வலக்கரத்தில் எப்போதும் திகழும் சுதர்ஸனர், எல்லா வைணவ கோயிலுக்குள்ளும் பெருமானோடு காட்சி தருகிறார். 


என்றாலும், சில கோயில்களில் சுதர்ஸனருக்குத் தனி சந்நிதி உள்ளது. 

அங்கே யோக நரசிம்மராக ஒருபுறத்திலும் சுதர்ஸனராக மற்றொரு புறத்திலும் எழுந்தருளி காட்சி தருகிறார். 

அப்படிப்பட்ட கோயில்களில் சுதர்ஸனர் தனிக் கோவிலில் எழுந்தருளி காட்சி தரும் இடம் கும்பகோணம் சக்கரபாணிப்பெருமான் கோயில். மேலும் திருமோகூர். 

திருவரங்கம், காஞ்சிபுரம் போன்ற கோயில்களிலும் சக்கரத்தாழ்வார் சந்நிதிகள் அமையப் பெற்று புகழுடன் திகழ்கின்றன.

கும்பகோணம் ஸ்ரீசக்கரபாணி:

கும்பகோணம் என்று அழைக்கப்படும் திருக்குடந்தை திவ்வியதேசத்தில் தனிக் கோயிலில் சக்கரப்பாணிப் பெருமானாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார் சுதர்ஸனாழ்வார். 

உலகுக்கு ஒளிதரும் சூரியனில் ஒரு கரும் புள்ளி விழுந்தது. ஆம், அவனுக்கு அகந்தை ஏற்பட்டது. கர்வம் மிகுந்தது. 

அபரிமிதமான பிரகாசத்தாலும் தன்னைப் பற்றிய கர்வம் மிகுந்தது. சூரியனுக்கு ஏற்பட்ட அகந்தையால், அவன் மற்றவருக்குத் துன்பம் இழைக்கலானான். 

அபரிமிதமான வெப்பத்தால்; தேவர்களையும் மற்ற உயிரினங்களையும் கோள்களையும் தகிக்கத் தொடங்கினான்.

சூரியனின் வெப்பத்தைத் தாள முடியாமல் எல்லோரும் மகாவிஷ்ணுவிடம் பிரார்த்தித்தனர். 

இதனால் சூரியனுக்கு ஏற்பட்ட பின்னடைவைப் போக்க எண்ணினார் விஷ்ணு. ஆனால் அதை எப்படிச் செயல்படுத்துவது? 

தீமைகள் மலியும்போது அவதரித்து அந்தத் தீமையைக் களைவேன் என்றான் பகவான். துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனம் என்ற வகையில், தீயவனை அழித்து, நல்லவனைக் காப்பது என்பது அவன் விரதம். 

இப்போது தீமை முளைத்துள்ளது. ஆனால் அந்தத் தீமையைச் செய்பவன் சூரியன். அவன் ஒன்றும் தீயவன் இல்லையே. 

உலகுக்குப் பயன் தருவதற்காகப் படைக்கப்பட்டவனல்லவா? ஆகவே அவன் அழிக்கப்பட்ட வேண்டியவனல்லன்; அவனுடைய அகந்தை குணம்தானே அழிக்கப்பட்ட வேண்டியது?

இங்கே சூரியனும் பகவானின் ஆணைப்படி இயங்குபவனாயிற்றே. அதனால் சூரியனுக்குப் புத்தி புகட்ட தன் அதிகாரி ஒருவனிடம் ஒப்படைத்தார் பகவான். அந்த அதிகாரி சக்கரத்தாழ்வார். 

தன்னிடம் பிரார்த்தனை செய்த தேவர்களிடம் பெருமான் கூறினான்; எம்திருவாழிக்கு இந்தப் பணியைக் கொடுத்திருக்கிறோம். இப்போது ஜலந்தராசுரன் என்ற அசுரனை அடக்க சுதர்ஸனரைப் பூலோகத்துக்கு அனுப்பியுள்ளேன். 

நீங்கள் அனைவரும் பிரம்மாவுடன் பூலோகத்தில் உள்ள காவிரிகரைக்குச் சென்று சுதர்ஸனரைத் தியானம் செய்யுங்கள். 

சுதர்ஸனர் உங்களுக்குக் காட்சிதந்து உங்கள் கோரிக்கையை நிறைவேற்றி வைப்பார் என்று அருள் செய்தார். அப்படி அவர் காட்டிய காவிரிதீரம் கும்பகோணம்.

பகவான் விஷ்ணுவின் ஆணைப்படியே, பிரம்மா முதலானோர் காவிரிக்கரையில் பிரார்த்தனை செய்தனர். சுதர்ஸனர் தோன்றினார். அவரிடம் தங்கள் கோரிக்கையை முன்வைத்தனர். 

ஊழியர் மீதான ஒழுங்கு நடவடிக்கைபோல், சுதர்ஸனர் சூரியனிடம் இருந்து ஒளியைக் கவர்ந்து, அதை மறைத்துச் சூரியனை சஸ்பெண்ட் செய்தார். 

அவ்வளவுதான்! சூரியனின் மமதை இருந்த இடம் தெரியாமல் போனது. தன்னால் ஒன்றும் இல்லாது என்பதை உணர்ந்த சூரியன், சுதர்ஸனாழ்வாரிடம் மன்னிப்பு கேட்டான்.

அப்போது சுதர்ஸனர், சூரியதேவா, நீயும் உன் போன்ற பிரபஞ்ச சக்திகளும் உலக நலன்களுக்காகவே படைக்கப்பட்டிருக்கிறீர்கள். 

அதற்காக உங்களுக்கு அளிக்கப்பட்ட சக்திகள் உங்களுடையவை அல்ல. எல்லாம் வல்ல பரம்பொருளினுடையது. பரம்பொருளே அந்தச் சக்தியை உங்களின் மூலமாக உலகுக்குக் கொடுக்கிறது. 

ஆனால் நீங்களோ உரிமையாளன் போல் செருக்குறுதல் தகுமா? அப்படிச் செருக்குற்றால், உங்கள் சக்தியைப் பரம்பொருள் மீண்டும் எடுத்துக்கொள்ளும் என்று சொன்னார்.

தன் நிலை நினைத்து வருந்திய சூரியன், அவரைப் பணிந்து மீண்டும் அந்தச் சக்தியைத் தர வேண்டினான். அவன் வேண்டியபடிச் சூரியனுக்கு அந்தச் சக்தியை வழங்கினார் சுதர்ஸனர். 

சுதர்ஸனர் கூறிய பரம்பொருள் யார் என்று தெரிந்து கொள்வதில் சூரியனுக்கு ஆர்வம் ஏற்பட்டது. அதை வாயுவிட்டுக் கேட்டே விட்டான் சூரியன். சுதர்ஸனர் சொன்னார்; நீயும் உன் காரணமாக உலகமும் உணர்ந்துகொள்ள அந்தப் பரம்பொருள் என்னில் காட்சி தருவார் என்றார். 

உடனே அங்கே கோடி சூரியப் பிரகாசத்தோடு சக்கரம் பிரம்மாண்டமாக விரிவடைந்து. அதில் விஸ்வரூபியாகப் பெருமான் காட்சி தந்தார். அந்தக் காட்சியைப் என்றென்றும் வணங்க, மக்கள் அவரைத் திருக்கோயிலில் பிரதிஷ்டை செய்து பூஜித்து வந்தார்கள்.

 இன்றும் இந்தக் கோலத்தில் சுதர்ஸனாழ்வார் சேவை சாதிக்கக் காண்கிறோம். சாரங்கபாணிப் பெருமானால் அனுப்பி வைக்கப்பெற்ற சக்கரத்திலிருந்து சக்கரராஜனாக மூன்று திருக்கண்களுடன், எட்டுக் கைகளுடன், அக்னி மயமான கேசத்துடன் (ஜ்வாலாகேசம்) தோன்றி, ஆதவனின் ஆணவத்தை அடக்கி திரும்பவும் சூரியனுக்கு ஒளி தந்து, திவ்விய அருளுடன் திருக்காட்சி அளிக்கிறார். 

ஆதவனே சக்கரராஜனுக்குத் தனி கோயிலை நிர்மானித்து, பல உற்சவங்களை நடத்தி வருவதால் திருக்குடந்தை (கும்பகோணம்) பாஸ்கர க்ஷேத்திரம் எனச் சிறப்புடன் அழைக்கப்படுகிறது. 

இன்றும் காவிரியில் சக்கர தீர்த்தம் என்ற சக்கரப் படித்துறையில் உற்சவங்கள் முடிந்ததும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி கண்டருள்கிறார்.

எல்லாக் கோள்களுக்கும் நாயகனான அந்தச் சூரியனே, இந்தத் தலத்தின் பெருமானிடத்தல் சரணாகதி அடைந்து பயன் அடைந்ததால், இந்தச் சக்கரராஜனைத் தூயமனத்துடன் வழிபடும் அடியார்களின் எல்லாத் துன்பங்களும் சகல கிரக தோஷங்களும் விலக்கப்பட்டு, பிரார்த்தனைகளும் நிறைவேற்றப்படுகின்றன என்பதை இன்றும் நேரடியாகக் காணலாம். 

சக்கரராஜனுக்குத் திருத்துழாய் புஷ்பங்களோடு வில்வ அர்ச்சனையும் குங்கும அர்ச்சனையும் செய்யப்படுவது தனிச்சிறப்பு. 

திருமாலின் மேன்மையை, தெளிவாகத் தம்முடைய பாசுரங்கள் மூலம் நிலைநாட்டியவர், சக்கரத்தாழ்வாரின் அம்சமாக அவதரித்த திருமழிசைப்பிரான். 

இவர் பரமனின் ஆழியைத் தரித்த ஆழியானாகத் திருவுள்ளம் கொண்டு, அமரர்கள் அதிபதியாகக் கண்டு நிரூபித்தார். அவர் அருளிய திருப்பாசுரங்களில் ஒன்று.

தூய்மை யோகம் ஆயினாய் துழாய் அலங்கள் மாலையாய்
ஆமையாகி ஆழ்கடல் துயின்ற ஆதி தேவ! நின்
நாம தேயம் இன்ன தென்ன வல்ல மல்ல மாகிலும்
சாம் வேத கீதனாய் சக்ரபாணியில்லையே

 சக்கரத்தாழ்வானைக் கையில் உடையவன் ஆனதால் சக்கரதாரி, சக்கரபாணி எனும் திருநாமங்களையும் பெற்றுள்ளார் திருமால். திருக்குடந்தையில் ஆழியாழ்வான் அம்சம் கொண்டு அரிச்சாவதாரமாகக் கோயில் கொண்டுள்ள சக்கரபாணியைப் போற்றும் பாசுரம்.

தோடவிழ் நிலம் மணங்கொடுக்கும்
ஆழ்புனல் சூழ்குடந்தைக் கிடந்த
சேடர்கொல் என்று தெரிக்கமாட்டேன்
செஞ்சுடராழியும் சங்கமுமேந்திப்
பாடகமெல்லடியார் வணங்கப்
பன்மணி முத்தோடிலங்கு சோதி
ஆடகம் பூண்டொரு நான்குதோளும்
அச்சோ ஒருவர் அழகியவர்.

தன் பக்தனின் கடனை அடைத்த. அம்பிகை....!

 தன் பக்தனின் கடனை அடைத்த. அம்பிகை....!


அந்த தேவி உபாசகர் ஒரு முறை, செல்வந்தர் ஒருவரிடம் பணம் கடன் வாங்கி , குறிப்பிட்ட காலத்தில் திருப்பி தருவதாக பத்திரம் எழுதி கையொப்பமும் இட்டிருந்தார் ....


.ஆனால் அவரால் குறித்த காலத்தில் கடனை திருப்பி தர இயலவில்லை !...


ஒரு நாள் அவர் பூஜையறையில் அம்பிகையை தியானித்தவாறு பூஜையில் ஆழ்ந்திருந்த அக்கணம் .


கடன் கொடுத்த அந்த செல்வந்தர் அவர் வீட்டு வாசலில் வந்து அவர் பெயரை சொல்லி அழைக்க ....


அந்த தேவி உபாசகர் வெளியே வராததால் ...கோபம் கொண்ட செல்வந்தர் அவரை வாயில் வந்தபடி திட்டி கூச்சல் போட. ஆரம்பித்தார் !


அப்போது உள்ளிருந்து அந்த தேவி உபாசகரின் மனைவி வெளியே வந்து  

" உங்களுக்கு பணம் தானே வேண்டும் ? ..கூச்சல் போடாதீர்கள் !..அரை நொடியில் பணத்துடன் வருகிறேன் ...''


மிிடுக்காக சொல்லி விட்டு வேகமாக அங்கிருந்து விரைந்தவள் , சொல்லி வைத்தாற்போல் அரை நொடியில் வந்தாள் , ஒரு சிறு பை சகிதம் .;

..பின் புன்னகையுடன் அந்த பையை அவரிடம் நீட்டியவாறே,


'' இதோ பாருங்கள் ..இந்த பையில் நீங்கள் கடனாக கொடுத்த பணமும் அதற்குண்டான , வட்டியும் உள்ளன !


.பூஜை முடிந்ததும் நீங்கள் அவர் கையினால் பிரசாதம் பெற்றுக்கொண்டு ,பின் இந்த பத்திரத்தையும் அவரிடமே கொடுத்து விடுங்கள் ! ''....


புன்னகை மாறாத முகத்துடன் சொல்லி விட்டு அந்த அம்மாள் உள்ளே செல்ல ..


செல்வந்தரும் பை, பத்திரம் சகிதம் வீட்டுதிண்ணையிலேயே அமர்ந்து கொண்டார் ..


சற்ற்றைக்கெல்லாம் பிரசாத தட்டுடன் வெளியே வந்த அந்த தேவி உபாசகர் , அங்கே அமர்ந்திருந்த செல்வந்தரை கண்டு வியப்பு மேலிட ,


'' அடடே ...உங்களை கவனிக்க வில்லை ....மன்னியுங்கள் ! ''

பிரசாத தட்டை நீட்டியவாறு மெல்லிய குரலில் பேசியவரை பேச விடவில்லை அந்த செல்வந்தர் ..


'' முதலில் இந்த பத்திரத்தை வாங்கி கொள்ளுங்கள் ! ''...

அவரின் வார்த்தைகள் கேட்டு தேவி உபாசகருக்கு ஏகத்துக்கு ஆச்சரியம் !.புருவம் முடிச்சிட , 


.'' நான் இன்னும் உங்கள் கடனை அடைக்கவில்லையே ?..''

'பரிதாமாக கூறியவரை புன்னகையுடன் ஏறிட்டார் செல்வந்தர் ;


'' உங்கள் மனைவி சற்று முன்பு வந்து மொத்த கடனையும் அடைத்துவிட்டு , பத்திரத்தையும் உங்களிடம் கொடுக்க சொன்னார் !''


ஆச்சரியத்தில் ஆழ்ந்த தேவி உபாசகர் , பின் மனைவியை அழைத்து , 


'' நீ இவரது கடனை அடைத்ததாக கூறுகிறாரே ...உண்மையா ?.....''

என்று வினவ ....


அந்த அம்மையாரோ திகைப்புடன் ,


'' அய்யோ ...நான் பூஜையறையில் உங்களுடன் தானே இருந்தேன்...?..இது எப்படி சாத்தியம் ? ''


என்று அரற்றிய அக்கணம் ...


பூஜையறையிலிருந்து ஒரு அசரீரி !

'' நான் தான் பணம் கொடுத்தேன் !''..

குரல் கேட்டு பூஜையறைக்கு அனைவரும் விரைய,


அங்கே அம்பிகையின் உருவத்தை தவிர வேறு எதுவும் இல்லை!


இப்போது சகலமும் புரிந்து போயிற்று அந்த தேவி உபாசகருக்கு ;

கடனை அடைக்க , தன் மனைவி உருவில் வந்தது சாட்ஷாத் அம்பிகையே என்றுணர்ந்த அவரின் கண்களில் இப்போது தாரை தாரையாய் கண்ணீர் ! அருகே திக்பிரமையுடன் அவரது மனைவி !


'' உங்கள் மேன்மை தெரியாமல் தவறாகபேசிவிட்டேன் ...

மன்னியுங்கள் !'' கண்கள் பனிக்க , செல்வந்தர் அவரின் கால்களில் விழுந்தார் !


அந்த தேவி உபாசகர் வேறு யாருமில்லை ..

லலிதா சஹஸ்ரநாமத்திற்கு பாஷ்யம் எழுதிய பாஸ்கரராயர்  தான் ! 


அவரின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம் இது ! 


தஞ்சை மாவட்டம் திருவாலங்காட்டுக்கு அருகே ,காவேரி ஆற்றங்கரையில் வசித்தவர் இவர் ! 


தஞ்சாவூர் மயிலாடுதுறை மார்க்கத்தில் , பாஸ்கர ராயபுரம் என்று ஒரு ஊர் இவர் பெயராலேயே இருக்கிறது.!

மழலைவரம் : பலன் தரும் பதிக வழிபாடு

 மழலைவரம் : பலன் தரும் பதிக வழிபாடு

கோதானம்(பசுக்கொடை), பூதானம் (நிலக்கொடை), வஸ்திரதானம் (உடைக்கொடை), அன்னதானம் (உணவுக்கொடை), சொர்ணதானம் (பொற்கொடை) உள்ளிட்ட எந்த தானத்தை வேண்டுமென்றாலும் நாம் இன்னொருவருக்குச் செய்துவிடலாம். ஆனால், சந்தானம் என்பதை இறைவனால் மட்டும்தான் நமக்குத் தரமுடியும். எனவே, தானங்களிலேயே சிறந்த தானம் சந்தானம்; அதாவது குழந்தைப்பேறு.எவ்வளவு செல்வம் இருந்தாலும் அதை அனுபவிக்க மக்கட்ெசல்வம் என்ற ஒன்று வேண்டும்.



பத்து திசைகளிலும் தேர் நடத்தி தனிப்பெயர் பெற்ற தசரதன் தனக்குக் குழந்தை வேண்டும் என்பதற்காக புத்திரகாமேஷ்டி யாகத்தை செய்து குழந்தை பெற்றார். பதினாறு வயது வாழ்ந்தாலும் போதுமென்று மகேஸ்வரனை வேண்டி மார்க்கண்டேயனை பெற்றெடுத்தார் மிருகண்டு முனிவர். இவ்வாறு அனைவரும் விரும்பும் அரியசெல்வம் மழலைச் செல்வம்.மனித வாழ்வில் மனையறத்தின் மாட்சிமையே நன்மக்களைப் பெறுதலில்தான் இருக்கிறது என்பதை,‘‘மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கட் பேறு’’ என்று குறிப்பிடுகிறார் திருவள்ளுவர்.


இல்லறத்தான் ஒருவனுக்கு இன்றியமையாத செல்வம் குழந்தைச் செல்வம். அதனால் தான் பதினாறு வகைச் செல்வங்களை சொன்ன அபிராமி பட்டர் குழந்தைச் செல்வத்தை சொல்லும்போது மட்டும் எவருக்கும் குழந்தைச் செல்வம் மட்டும் தவறிவிடக் கூடாது என்பதற்காக, ‘‘தவறாத சந்தானமும்’’ என்று தவறாமல் குறிப்பிடுகிறார்.நல்லதொரு குழந்தைப்பேறு வாய்க்க தசரதரைப் போன்று யாகமோ, மிருகண்டு முனிவரைப் போன்று தவமோ நம்மால் செய்ய முடியுமா? என்றால் அது சற்று அரிதுதான். ஆனால், எளிமையாக வழிபாடு செய்ய முடியும். அதற்கு நாம் செல்ல வேண்டிய கோயில் ஒன்று இருக்கிறது.


அங்கு சென்று பரிகாரம் செய்ய வேண்டியதில்லை; பதிகம் பாடினால் போதும். ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டியதில்லை; அங்குள்ள குளத்தில் குளித்தால் போதும். அதனால் நிச்சயமாய் குழந்தைப் பேறு வாய்க்கும். அதன் பொருட்டு கட்டுக்கதையாக இல்லாமல் அனுபவத்தில் நம் முன்னோர் கண்டதைத்தான் இக்கட்டுரையில் நாம் காண இருக்கிறோம்.திருமணமாகி குழந்தைப்பேறு வாய்க்காத தம்பதியர் பலர் இருக்கின்றனர். இவர்கள் யாரோ சொன்ன பரிகாரங்களைச் செய்வதை விடவும் நம் முன்னோர் அனுபவ ரீதியாகக் கண்ட மரபார்ந்த வழிபாடுகளைச் செய்வதன்மூலம் பிள்ளை வரத்தைப் பெறமுடியும் இது திண்ணம்.


‘திருப்பெண்ணாகடம்’ என்ற ஊரில் அச்சுத களப்பாளர் என்பவர் மங்களாம்பிகை என்ற மங்கையை மணம்செய்து வாழ்ந்து வந்தார். நீண்ட நாட்களாகியும் குழந்தைப் பேறு இல்லாத காரணத்தால் என்ன செய்வது என்று தெரியாமல், திருத்துறையூரில் வாழ்ந்த சகலாகமப் பண்டிதரான அருள்நந்தி சிவாச்சாரியாரிடத்தில் தங்களின் குறையைக் கூறி மன்றாடினர். அப்போது அவர், மன்றுள் ஆடும் மகாதேவனை வணங்கி, தெய்வத்தமிழ்த் திருமுறை ஏட்டில் கயிறிட்டுப் பார்த்தார். அப்போது திருஞானசம்பந்தப் பெருமான் திருவாய் மலர்ந்தருளிய,


‘‘பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோடு உள்ள நினைவு


ஆயினவே வரம்பெறுவர் ஐயுற வேண்டா ஒன்றும்


வேயனதோள் உமைபங்கள் வெண்காட்டு முக்குளநீர்


தோய்வினையார் அவர்தம்மைத் தோயாவாம் தீவினையே’’


என்ற பாடல் வந்தது.


உடனே, அந்த சிவாச்சாரியார் இந்தப் பதிகம் பாடல்பெற்ற தலமாகிய திருவெண்காட்டுக்கு அச்சுத களப்பாளரையும் மங்களாம்பிகையையும் சென்று சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம் (தேவி கோயில் தீர்த்தம்) மற்றும் அக்னிதீர்த்தம் ஆகிய மூன்று குளங்களிலும் நீராடி, பதிகத்தை முழுமையாக மனமுருகிப் பாராயணம் செய்து பரமனை வணங்கிவரச் சொன்னார்.


சிவாச்சாரியாரின் சொற்படி அவர்களும் வெண்காடு சென்று, முக்குளத்தில் நீராடி, ‘‘கண்காட்டு நுதலானும்’’ என்று தொடங்கும் அருட்பதிகத்தை ஆர்வத்துடன் பாராயணம் செய்து, அங்கு அருள் நல்கும் சுவதாரண்யேஸ்வரர் எனும் வெண்காட்டீசரை வழிபாடு செய்தார்கள்.


அன்றிரவே ஆண்டவன் அச்சுத களப்பாளரின் கனவில் எழுந்தருளி, ‘‘இப்பிறவி யில் உமக்கு பிள்ளைப்பேறு வாய்க்க வாய்ப்பில்லை. ஆனால், நம் பிள்ளையாகிய ஞானசம்பந்தனின் ஞானத்தமிழ்ப்


பதிகத்தைப் பாராயணம் செய்த காரணத்தால் உமக்கு நாம் நல்ல குழந்தைச் செல்வத்தைத் தந்தோம்’’ என்று அருள்செய்து மறைந்தார்.அதைக்கேட்ட அச்சுத களப்பாளர் ஆனந்தத்தின் எல்லைக்கே சென்று நடந்ததை தன்னுடைய மனைவியாரிடத்தில் சொல்லி மகிழ்ந்தார்.


அன்று தொடங்கி சரியாக பத்தாவது திங்களில் ஞானசம்பந்த பிள்ளையப் போன்றே ‘சுவேதனப்பெருமான்’ என்ற ஞானக் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைதான் சந்தானக் குரவர்கள் நால்வருள் முதல்வராக இருக்கக்கூடிய மெய்கண்டார். அவர் அருளிய சிவஞானபோதம்தான் சைவ சித்தாந்த சாத்திரங்களுள் முதன்மையாகப் போற்றப்படுகிறது. சைவ சமயத்தின் முடி மணியாகத் திகழக்கூடிய இந்த சித்தாந்தம் பிறப்பதற்கும் இதற்குக் காரணமாக மெய்கண்டார் பிறப்பிற்கும் காரணமாக அமைந்தது திருவெண்காட்டில் அச்சுத களப்பாளரும் அவருடைய மனைவியாரும் செய்த வழிபாடுதான். இதனை நினைவு கூறும் வகையில் அங்குள்ள சந்திர தீர்த்தத்திற்கு அருகில் மெய்கண்டாரின் ஆலயம் தற்போதும் காணப்படுகின்றது.


அந்த வகையில் நாமும் நம்முடைய பெரியவர்கள் கண்ட அனுபவத்தை வெறும் வரலாறாக மட்டுமே பார்க்காமல் நம் வாழ்க்கையில் செயல்படுத்தலாம். அவ்வாறு பல தம்பதிகள் இந்தக் கோயிலுக்கு சென்று இப்படி வழிபாடு செய்ததால் குழந்தைப்பேறு பெற்றுள்ளனர். ஆகவே, நாமும் நல்ல குழந்தைப்பேறு பெற வேண்டுமென்றால் இந்தத் திருக்கோயிலுக்கு சென்று வழிபாடு நிகழ்த்த வேண்டும்.


மயிலாடுதுறையிலிருந்து மங்கைமடம் செல்லும் வழியில் அமைந்துள்ள இத்திருத் தலமானது சோழநாட்டு காவிரி வடகரைத் தலங்களில் பதினொன்றாவது தலமாக இடம் பெற்றுள்ளது. மூன்று மூர்த்திகள் (சுவேதாரண்யேஸ்வரர், அகோரர், ஆடல்வல்லான்) மூன்று தலமரங்கள் (வில்வம், கொன்றை, ஆல்) மூன்று தீர்த்தங்கள் (சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம்), மூவரும் தேவாரம் பாடிய பெருமை என்று சிறந்து விளங்கும் இத்திருத்தலம்தான் நவகிரகங்களில் ஒன்றான புதனுக்குரிய திருத்தலமாகவும் திகழ்கிறது.


‘ஆதி சிதம்பரம்’ என்று அழைக்கப்படும் இத்தலத்தில் வெள்ளானை வழிபட்டதை, ‘‘வெள்ளானை வேண்டும் வரம் கொடுக்கும் வெண்காடு மேவிய விகிர்தனாரே’’ என்று அப்பரடிகள் பாடுவதாலும் தேவர் தலைவனான தேவேந்திரன் பூசித்ததை, ‘‘விண்ணவர்கோன் வழிபட’’ என்று சம்பந்தர் பாடுவதாலும் அறியலாம். பட்டினத்தாருக்கு இவ்வூரின் பெயரால் ‘திருவெண்காடர்’ என்ற ஒரு திருப்பெயருண்டு. ‘முக்தி வெண்காடு, முக்தி நகர், முக்தி வாயில்’ என்றெல்லாம் இத்தலம் போற்றப்படுகிறது.


சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் சூரியகுண்டம் மற்றும் சோமகுண்டம் ஆகிய இரண்டும் இத்தலத்திலுள்ள சூரிய, சந்திர தீர்த்தங்கள் தான் என்று உரை செய்கிறார் தமிழ்த்தாத்தா உ.வே சாமிநாதையர். மேலும், பெரியபுராணத்தில் இடம் பெற்றுள்ள சிறுத்தொண்டை நாயனாரின் மனைவியார் இந்த ஊரைச் சார்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி பல சிறப்புக்கள் பொருந்திய தலத்தை அடைந்து நாமும் முறையாக முக்குளத்தில் நீராடி, சம்பந்தப் பெருமானின் பதிகத்தை எண்ணம், சொல், செயல் மூன்றும் ஒன்றாகப் பாடி இறைவனை வழிபட, மெய்கண்டாரைப் போன்ற குழந்தைப்பேறு கட்டாயமாக வாய்க்கும். வழிபடுவோம்.


பாட வேண்டிய திருப்பதிகம்


திருச்சிற்றம்பலம்


‘‘கண்காட்டு நுதலானுங்


கனல்காட்டுங் கையானும்


பெண்காட்டும் உருவானும்


பிறைகாட்டுஞ் சடையானும்


பண்காட்டும் இசையானும்


பயிர்காட்டும் புயலானும்


வெண்காட்டில் உறைவானும்


விடைகாட்டுங் கொடியானே.


பேயடையா பிரிவெய்தும்


பிள்ளையினோ டுள்ளநினை


வாயினவே வரம்பெறுவர்


ஐயுறவேண் டாவொன்றும்


வேயனதோ ளுமைபங்கன்


வெண்காட்டு முக்குளநீர்


தோய்வினையா ரவர்தம்மைத்


தோயாவாந் தீவினையே.


மண்ணொடுநீ ரனல்காலோ


டாகாயம் மதிஇரவி


எண்ணில்வரு மியமானன்


இகபரமு மெண்டிசையும்


பெண்ணினொடாண் பெருமையொடு


சிறுமையுமாம் பேராளன்


விண்ணவர்கோன் வழிபடவெண்


காடிடமா விரும்பினனே.


விடமுண்ட மிடற்றண்ணல்


வெண்காட்டின் தண்புறவின்


மடல்விண்ட முடத்தாழை


மலர்நிழலைக் குருகென்று


தடமண்டு துறைக்கெண்டை


தாமரையின் பூமறையக்


கடல்விண்ட கதிர்முத்த


நகைகாட்டுங் காட்சியதே.


வேலைமலி தண்கானல்


வெண்காட்டான் திருவடிக்கீழ்


மாலைமலி வண்சாந்தால்


வழிபடுநன் மறையவன்றன்


மேலடர்வெங் காலனுயிர்


விண்டபினை நமன்தூதர்


ஆலமிடற் றான் அடியார்


என்றடர அஞ்சுவரே.


தண்மதியும் வெய்யரவுந்


தாங்கினான் சடையினுடன்


ஒண்மதிய நுதலுமையோர்


கூறுகந்தான் உறைகோயில்


பண்மொழியால் அவன்நாமம்


பலவோதப் பசுங்கிள்ளை


வெண்முகில்சேர் கரும்பெணைமேல்


வீற்றிருக்கும் வெண்காடே.


சக்கரமாற் கீந்தானுக்கு


சலந்தரனைப் பிளந்தானும்


அக்கரைமே லசைத்தானும்


அடைந்தயிரா வதம்பணிய


மிக்கதனுக் கருள்சுரக்கும்


வெண்காடும் வினைதுரக்கும்


முக்குளம்நன் குடையானும்


முக்கணுடை இறையவனே.


பண்மொய்த்த இன்மொழியாள்


பயமெய்த மலையெடுத்த


உன்மத்தன் உரம்நெரித்தன்


றருள்செய்தான் உறைகோயில்


கண்மொய்த்த கருமஞ்ஞை


நடமாடக் கடல்முழங்க


விண்மொய்த்த பொழில்வரிவண்


டிசைமுரலும் வெண்காடே.


கள்ளார்செங் கமலத்தான்


கடல்கிடந்தான் எனஇவர்கள்


ஒள்ளாண்மை கௌற்கோடி


உயர்ந்தாழ்ந்தும் உணர்வரியான்


வெள்ளானை தவஞ்செய்யும்


மேதகுவெண் காட்டாவென்(று)


உள்ளாடி உருகாதார்


உணர்வுடைமை உணரோமே.


போதியர்கள் பிண்டியர்கள்


மிண்டுமொழி பொருளென்னும்


பேதையர்கள் அவர்பிறிமின்


அறிவுடையீர் இதுகேண்மின்


வேதியர்கள் விரும்பியசீர்


வியன்திருவெண் காட்டானென்


றோதியவர் யாதுமொரு


தீதிலரென் றுணருமினே.


தண்பொழில்சூழ் சண்பையர்கோன்


தமிழ்ஞான சம்பந்தன்


விண்பொலிவெண் பிறைச்சென்னி


விகிர்தனுறை வெண்காட்டைப்


பண்பொலிசெந் தமிழ்மாலை


பாடியபத் திவைவல்லார்


மண்பொலிய வாழ்ந்தவர்போய்


வான்பொலியப் புகுவாரே’’.

ஸ்ரீ தட்சிணாமூர்த்தி 108 போற்றிகள்

 ஸ்ரீ தட்சிணாமூர்த்தி 108 போற்றிகள்


வாழ்வில் வளங்கள் அள்ளி வழங்க வியாழன் மட்டும் அல்ல எல்லா நாட்களிலும் வழிபட வேண்டிய சிவபெருமானின் ஓர் அம்சம்!இவர் வேறு! நவகிரக சுபகிரகம் குருபகவான் வேறு   !

SRI DAKSHINAMOORTHY SWAMY
SRI DAKSHINAMOORTHY


1. ஓம் அறிவுருவே போற்றி

2. ஓம் அழிவிலானே போற்றி

3. ஓம் அடைக்கலமே போற்றி


 4. ஓம் அருளாளனே போற்றி

5. ஓம் அல்லல் அறுப்பவனே போற்றி

6. ஓம் அடியாரன்பனே போற்றி

7. ஓம் அகத்துறைபவனே போற்றி

8. ஓம் அகந்தையழிப்பவனே போற்றி

9. ஓம் அற்புதனே போற்றி

10. ஓம் அபயகரத்தனே போற்றி


11. ஓம் ஆன்கீழமர்ந்தவனே போற்றி

12ஓம் ஆன்மீகநாதனே போற்றி

13. ஓம் ஆச்சாரியனே போற்றி

14. ஓம் ஆசாரக்காவலே போற்றி

15. ஓம் ஆக்கியவனே போற்றி

16. ஓம் ஆதரிப்பவனே போற்றி

17. ஓம் ஆதி பகவனே போற்றி

18. ஓம் ஆதாரமே போற்றி

19. ஓம் ஆழ்நிலையானே போற்றி

20. ஓம் ஆனந்த உருவே போற்றி

21. ஓம் இருள் கொடுப்பவனே போற்றி

22. ஓம் இருமை நீக்குபவனே போற்றி

23. ஓம் இசையில் திளைப்பவனே போற்றி

24. ஓம் ஈடேற்றுபவனே போற்றி

25. ஓம் உய்யவழியே போற்றி

26. ஓம் ஊழிக்காப்பே போற்றி

27. ஓம் எந்தையே போற்றி

28. ஓம் எளியோர்க்காவலே போற்றி

29. ஓம் ஏகாந்தனே போற்றி

30. ஓம் ஏடேந்தியவனே போற்றி

31. ஓம் ஒளிப்பிழம்பே போற்றி


32. ஓம் ஓங்கார நாதமே போற்றி

33. ஓம் கயிலை நாதனே போற்றி

34. ஓம் கங்காதரனே போற்றி

35. ஓம் கலையரசே போற்றி

36. ஓம் கருணைக்கடலே போற்றி

37. ஓம் குணநிதியே போற்றி

38. ஓம் குருபரனே போற்றி

39. ஓம் சதாசிவனே போற்றி

40. ஓம் சச்சிதானந்தமே போற்றி

41. ஓம் சாந்தரூபனே போற்றி


42. ஓம் சாமப்பிரியனே போற்றி

43. ஓம் சித்தர் குருவே போற்றி

44. ஓம் சித்தியளிப்பவனே போற்றி

45. ஓம் சுயம்புவே போற்றி

46. ஓம் சொற்பதங்கடந்தவனே போற்றி

47. ஓம் ஞானமே போற்றி

48. ஓம் ஞானியே போற்றி

49. ஓம் ஞானநாயகனே போற்றி

50. ஓம் ஞானோபதேசியேபோற்றி

51. ஓம் தவசீலனே போற்றி


52. ஓம் தனிப்பொருளே போற்றி

53. ஓம் திருவுருவே போற்றி

54. ஓம் தியானேஸ்வரனே போற்றி

55. ஓம் தீரனே போற்றி

56. ஓம் தீதழிப்பவனே போற்றி

57. ஓம் துணையே போற்றி

58. ஓம் தூயவனே போற்றி

59. ஓம் தேவாதிதேவனே போற்றி

60. ஓம் தேவருமறியா சிவனே போற்றி

61. ஓம்நன்னெறிக்காவலே போற்றி


62. ஓம் நல்யாக இலக்கே போற்றி

63. ஓம் நாகப்புரியோனே போற்றி

64. ஓம் நான்மறைப்பொருளே போற்றி

65. ஓம் நிலமனே போற்றி

66. ஓம் நிறைந்தவனே போற்றி

67. ஓம் நிலவணியானே போற்றி

68. ஓம் நீறணிந்தவனே போற்றி

69. ஓம் நெற்றிக்கண்ணனே போற்றி

70. ஓம் நோய் தீர்ப்பவனே போற்றி

71. ஓம் பசுபதியே போற்றி


72. ஓம் பரப்பிரம்மனே போற்றி

73. ஓம் பிரம்மச்சாரியே போற்றி

74. ஓம் பிறப்பறுப்போனே போற்றி

75. ஓம் பேறளிப்பவனே போற்றி

76. ஓம் பேசாமற்றெளிவிப்பேன் போற்றி

77. ஓம் பொன்னம்பலனே போற்றி

78. ஓம் போற்றப்படுவனே போற்றி

79. ஓம் மறைகடந்தவனே போற்றி

80. ஓம் மறையாப் பொருளே போற்றி

81. ஓம் மஹேசுவரனே போற்றி


82. ஓம் மங்கலமளிப்பவனே போற்றி

83. ஓம் மலைமுகட்டிருப்பவனே போற்றி

84. ஓம் மாமுனியே போற்றி

85. ஓம் மீட்பவனே போற்றி

86. ஓம் முன்னவனே போற்றி

87. ஓம் முடிவிலானே போற்றி

88. ஓம் முக்கண்ணனே போற்றி

89. ஓம் மும்மலமறுப்பவனே போற்றி

90. ஓம் முனீஸ்வரனே போற்றி

91. ஓம் முக்தியளிப்பவனே போற்றி


92. ஓம் மூலப்பொருளே போற்றி

93. ஓம் மூர்த்தியே போற்றி

94. ஓம் மோஹம் தீர்ப்பவனே போற்றி

95. ஓம் மோன சக்தியே போற்றி

96. ஓம் மௌன உபதேசியே போற்றி

97. ஓம் மேதா தட்சணாமூர்த்தியே போற்றி

98. ஓம் யோக நாயகனே போற்றி

99. ஓம் யோக தட்சணாமூர்த்தியேபோற்றி

100. ஓம் யம பயமழிப்பவனே போற்றி

101. ஓம் ருத்திரப்பிரியனே போற்றி


102. ஓம் ருத்திராட்சம் பூண்டவனே போற்றி

103. ஓம் வித்தகனே போற்றி

104. ஓம் விரிசடையனே போற்றி

105. ஓம் வில்வப்பிரியனே போற்றி

106. ஓம் வினையறுப்பவனே போற்றி

107. ஓம் விஸ்வரூபனே போற்றி

108. ஓம் தட்சணா மூர்த்தியே போற்றி போற்றி!

Sunday, August 22, 2021

MAHA PERIYAVAA STORIES

 பெரியவாதான், தன்னை வழிமறித்துத் தற்கொலையைத் தடுத்தவர் என்பதைக் கண்ணெதிரே கண்ட உருவத்தால் உணர்ந்தார்.

ஆந்திராவில் பெரியவா இருந்த சமயம் அது. 


ராகவ சாஸ்திரி என்ற ஆசார சீலர் ஒருவர் இருந்தார். அவர் பெரிய பண்டிதரும் கூட. பூஜைகளை சிரத்தையாகச் செய்வார்.


மக்கள் பலர் வந்து வணங்கிச் செல்வதுண்டு.


ஒரு நாள் பூஜையைத் தொடங்கப் போகிற சமயம், ஒருவன் வந்து அவர் காலைத் தொட்டு கும்பிட்டு விட்டான். 


அதனால், ஆசாரம் போய்விட்டதென்று, பெருங்கோபம் கொண்டு அவர் கத்தினார். 


எத்தனை மன்றாடியும், மன்னிக்க மறுத்து விட்டார். அழுது கொண்டே அவன் போனான்.


சிறிது நேரம் கழித்து, சாஸ்திரிக்கு, தான் நடந்து கொண்ட முறையை நினைத்து குற்ற உணர்வு வந்தது. 


கோபத்தை அடக்க முடியவில்லையே! என்ன பூஜை பண்ணி, என்ன ஆசார அனுஷ்டானம் பண்ணினாலும், என்ன பயன்?' என்று கழிவிரக்கப்பட்டார். 

தன் மேல் வந்த வெறுப்பில், தற்கொலையே செய்து கொள்ளும் அளவுக்குப் போய், கோதாவரியில் விழுவதற்குக் கிளம்பி விட்டார்.


அப்போது, அவர் எதிரே சாமியார் ஒருவர் காட்சி கொடுத்தார். "நில்" என்று தடுத்தார். 


சாஸ்திரி தன்னையும் அறியாமல் மனம் உருகிப் போனார். மறுபடியும் வீட்டுக்கே போய்விட்டார். 


அன்று இரவு கனவில், மறுபடியும் அதே சாமியார் காட்சி கொடுத்தார். 


அதற்குப் பிறகு அவருக்குத் தூக்கம் பிடிக்கவில்லை. 


மறுபடியும், தற்கொலை எண்ணம் வருவதும், போவதுமாக இருந்தது. பொழுது விடிந்தது.


இரு நண்பர்கள் காரில் வந்து இறங்கினார்கள்.


"பக்கத்து ஊரில் காஞ்சி காமகோடி சங்கராச்சார்யார் வந்திருக்காராம். வர்ரீங்களா ! தரிசனம் பண்ணி விட்டு வரலாம்" என்று சாஸ்திரியை அழைத்தார்கள்.


அதற்கிணங்க கிளம்பிச் சென்றவர், பெரியவாதான், தன்னை வழிமறித்துத் தற்கொலையைத் தடுத்தவர் என்பதைக் கண்ணெதிரே கண்ட உருவத்தால் உணர்ந்தார். 


கண்ணீர் வழிந்தது.


அவரைக் கண்டதும் பெரியவா, 


"ஒரு சால்வையை எடுத்து அவருக்குப் போர்த்துங்கள்!" என்று அங்குள்ள ஒருவரிடம் சொன்னார்.


சாஸ்திரியோ," இதற்கெல்லாம் எனக்கு அருகதையே இல்லை; நான் ராக த்வேஷத்தை விடாதவன்!" என்று வாங்கிக் கொள்ள மறுத்து விடுகிறார்.


பெரியவா பெருங்கருணையுடன், 


"உன்னிடம் ஒரு தோஷமும் இல்லை. இந்த சால்வையை ஏத்துக்கோ.. "என்று சொல்லவே, அவரால் மறுக்க முடியவில்லை.


அன்றிலிருந்து அவருக்கு கோபம் என்பதே வரவில்லையாம்.


முன்பின் தெரியாதவர்களுக்குக் கூட சுவாமிகள், அனுக்ரகம் உண்டு என்பதை இங்கே பார்க்கிறோம்.


பின் குறிப்பு - 


ராகத்வேஷம்


சில விஷயங்களில் ரொம்பப் பற்றுடன் இருப்பதும், சிலவற்றை புறந்தள்ளுவதும் மிகச் சாதாரணம். இந்த மாதிரியான பிடித்தது, பிடிக்காதது அப்படின்னு இருப்பதையே ராகத்வேஷம் அப்படின்னு சொல்லியிருக்கு.


பொதுவாக ராக த்வேஷம் கொண்டவர்களுக்கு பிறரைத் தொந்தரவு செய்யும் மனப்பான்மை இருக்கும்.


ஆனால் ஒரு பூரண பக்தனுக்கு / சரணாகதி செய்பவனுக்கு இந்த குணம் இருக்காது.


ஏனென்றால் அவனுக்கு இறைவனை விட உயர்ந்த பொருள் என்று எதுவுமே கிடையாது

MAHA PERIYAVAA STORIES

 "சர்வேஸ்வரா.. எனக்கு அனுக்ரஹம் பண்றதுக்காக என்னைத் தேடிண்டு நீயே வந்துட்டியா?" --பாட்டி.



மகாபெரியவாளே தேடிண்டு போய் பார்க்கறார்னா, அந்தப் பாட்டி எவ்வளவு பெரிய பாக்கியசாலின்னு அப்போதான் எல்லாருக்கும் புரிஞ்சுது.


ஒரு சமயம், மகாபெரியவாளோட அவதாரத் திருநட்சத்திர நாளான அனுஷ நட்சத்திர நாள்ல அவரை நிறையப்பேர் தரிசிக்க வந்திருந்தா. அந்தக் கூட்டத்துல வயசான பாட்டி ஒருத்தியும் இருந்தா.


அவளைப் பார்த்ததும் சைகை காட்டி கூப்பிட்ட, பெரியவா, "எல்லாம் க்ஷேமமா நடக்கறதா? எப்படி இருக்கான் உன்னோட ஸ்வீகார புத்ரன்?" அப்படின்னு கேட்டார்.


"மகாபெரியவா, உங்க ஆசிர்வாதத்துல எல்லாம் நல்லபடியா நடக்கறது. புத்ரன் ஒரு அக்கறையும் இல்லாம ஏதோ இருந்துண்டிருக்கான். குடியிருக்கற அகம்தான் முழுக்க பொத்தலாகி ஒழுகிண்டு இருக்கு. நீங்க அனுக்ரஹம் பண்ணி கொஞ்சம் சீர்படுத்திக் குடுக்கச் சொன்னா தேவலை!" பாட்டி சொன்ன பதிலைக் கேட்டதும் எல்லோருக்கும் அதிர்ச்சி.


"என்ன இவ.... வீடுபேறையே தரக்கூடிய ஆசார்யாகிட்டே, குடியிருக்கற வீடு ஒழுகறது, அதை சரிப்படுத்திக் குடுங்கோன்னு கேட்கறாளே!" ஆளாளுக்கு முணுமுணுக்க ஆரம்பிச்சா.


அதையெல்லாம் லட்சியம் பண்ணாம, "இந்த க்ஷேத்ரத்துல மழையா? காஞ்சிபுரந்தான் காஞ்சு போயிருக்கே!" அப்படின்னு கேட்டுட்டு சிரிச்சார், மகாபெரியவா.


"இல்லையே!, முந்தானேத்திக்குக் கூட பெய்ஞ்சுதே, அப்போதான் அகம் முழுக்க ஒழுகி எல்லாம் நனைஞ்சு ஈரமாயிடுத்து!" சொன்னாள் அந்த மூதாட்டி.


"ஓ..அந்த சின்ன மழைக்கே ஒழுகிறதா? அப்படின்னா மாத்து ஏற்பாடு பண்ணிடறேன்!" -மகாபெரியவா.


யாரா இருப்பா அந்தப் பாட்டின்னு யோசிச்சா, பலர். வழக்கமா வர்றவா சிலர் விவரம் சொல்ல ஆரம்பிச்சா சின்ன வயசுலயே வாழ்க்கையை இழந்துட்டவ அந்தப் பாட்டி. ஆத்துக்காரர் வழியில ஏகப்பட்ட சொத்து அவளுக்கு வந்தது. சின்னப் பொண்ணா அவ இருந்ததால பலரும் அவளை ஏமாத்தி அதையெல்லாம் பிடுங்கிக்கப் பார்த்தா. ஆனா, மகாபெரியவாமேல அபிமானம் உள்ள குடும்பத்துல வந்த அந்தப் பொண்ணு, சட்டுன்னு,'எல்லா சொத்தும் காமாட்சிக்கே!" அப்படின்னு சொல்லிட்டா. பெரியவா எவ்வளவோ மறுத்தும், சொன்ன வாக்கு சொன்னதுதான், தான் மடத்துல ஒரு ஓரமா தங்கிக்கறேன்னுட்டா. அப்புறம் பெரியவாதான் மடத்துக்கு சொந்தமான இடத்துல இருந்த ஒரு வீட்டை அவளுக்கு ஒதுக்கிக் குடுத்தார். சின்னப் பொண்ணா இருந்த அவ இன்னிக்கு இதோ இவ்வளவு கிழவியாயிட்டா. ஆனா மகாபெரியவாமேல அவளுக்கு இருக்கிற பக்தி மட்டும் குறையவே இல்லை!"


பெரியவாகிட்டே உத்தரவு வாங்கிக்கறதுக்காக நமஸ்காரம் பண்ணினா, பாட்டி. அந்த சமயத்துல அங்கே வந்தா சிலர்.


ஒரு தாம்பாளத்துல சில பத்திரிகைகளை வைச்சு,"காமாக்ஷி அம்மன் கோயிலோட ப்ரம்மோத்ஸவப் பத்திரிகை!" அப்படின்னு பவ்யமா குடுத்தா.


"கலெக்டருக்கு, அறங்காவலருக்கு எல்லாம் குடுத்துட்டு, கடேசியா போனா போறதுன்னு எனக்குத் தரவந்தேளாக்கும், இந்த மடத்துக்குன்னு ஒரு சம்ப்ரதாயம் இருக்கு தெரியும் இல்லையா? மொதப் பத்திரிகையை எங்கே தரணும்கறதும் தெரிஞ்சிருக்குமே? எல்லா சம்ப்ரதாயத்தையும் மீறி நடந்துண்டா எப்படி? போங்கோ போயிட்டு இங்கே எந்த முறைப்படி வரணுமோ அப்படி வாங்கோ!" மகாபெரியவா.


சீற்றத்தைப் பார்த்து நடுங்கிப்போனவா அப்படியே திரும்பினா.


அவாள்ல ஒருத்தரைப்பார்த்து சொடக்குப் போட்டு கூப்பிட்ட பெரியவா, "ஆமா, வடக்கு சன்னிதியில நீ குடியிருக்கற அகத்துக்குப் பக்கத்துல இன்னும் ரெண்டு அகம் இருக்கே, அங்கே யார் இருக்கா!" கேட்டார் பெரியவா.(மடத்துக்கு சொந்தமான இடம்)


இரண்டு பேர் பெயரைச் சொன்னார் அவர். அவர்கள்ல ஒருத்தரோட பேரைச் சொன்ன பெரியவா, "அவர்தான் மேல போயிட்டாரே .. அவரோட வாரிசுகளும் ஏதோ ஆபீசுல வேலை செஞ்சுண்டு இருக்கா மடத்துல வேலை செய்யறவாளுக்குதானே நாம வீடு குடுக்கணும். அவா யாரும்தான் இங்கே வேலை செய்யலையே. அப்புறம் அவாளுக்கு ஏன் அந்த வீட்டை விட்டிருக்கேள்?"


அவர்கள் திகைத்து நிற்க ஆசாரியார் தொடர்ந்து சொன்னார்.


"ஒண்ணு பண்ணு. அவாளை அங்கேர்ந்து பொறப்படச் சொல்லிட்டு, இந்தப் பாட்டி நாளன்னிக்கு அந்தாத்துக்குப் போறதுக்கு ஏற்பாடு பண்ணிடுங்கோ!"


பெரியவா பேச்சுக்கு மறு பேச்சு ஏது? அப்படியே செஞ்சு முடிச்சா. இது நடந்து மூணு மாசத்துக்கு அப்புறம் ஒருநாள் காமாக்ஷியை தரிசனம் பண்ணிட்டு, வடக்கு சன்னதி வழியா நடந்து வந்துண்டு இருந்த பெரியவா சட்டென்று ஒரு வீட்டின் முன்னால் நின்னார்.


என்னவோ ஏதோன்னு எல்லாரும் குழம்ப, "ரெண்டு மூணு நாளா பாட்டி மடத்துக்கு வரக்காணோம். உள்ள போய்ப் பாரு ஒடம்புக்கு கிடம்புக்கு முடியலையோ என்னவோ!" உடன் வந்த ஒரு பக்தர்கிட்டே உத்தரவிட்டார் மகாபெரியவா.


பெரியவா உத்தரவுப்படி அந்த வீட்டுக்குள்ளே நுழைஞ்ச பக்தர் அப்படியே திகைச்சுட்டார். ஒரு குமுட்டி அடுப்பு, ரெண்டே ரெண்டு பாத்ரம் இதைத்தவிர எதுவுமே இல்லை வீட்டுல. அங்கே ஒரு மூலையில முடங்கிண்டு முனங்கிண்டு இருந்தா அந்தப் பாட்டி.  அவளைப் பார்த்ததுமே காய்ச்சல்னு புரிஞ்சுடுத்து. மெதுவா அவ பக்கத்துல போய், பெரியவா வாசலில் நிற்கிற விஷயத்தை அந்த பக்தர் சொன்னதுதான் தாமதம்! அத்தனை அவஸ்தையையும் மறந்து சட்டுன்னு எழுந்து ஓடோடி வந்து மகாபெரியவா திருவடியில விழுந்தா.


"சர்வேஸ்வரா.. எனக்கு அனுக்ரஹம் பண்ணறதுக்காக என்னைத் தேடிண்டு நீயே வந்துட்டியா?" அப்படின்னு சொல்லி பிரதட்சணம் பண்ணினா.


வலம் வந்த வேகத்துலயே அந்தப் பாட்டியோட காய்ச்சல் குணமாகி அவ பூரண நலம் அடைஞ்சுட்டான்னு புரிஞ்சுது.


மகாபெரியவாளே தேடிண்டு போய் பார்க்கறார்னா, அந்தப் பாட்டி எவ்வளவு பெரிய பாக்கியசாலின்னு அப்போதான் எல்லாருக்கும் புரிஞ்சுது.


MAHA PERIYAVAA STORIES

 "ஐயோ, அந்தக் குழந்தை கதி  என்ன ஆயிற்று என்று தானே நினைக்க வைக்கிறது? நம் நினைவிலிருந்து கொடிய விஷம் கொண்ட ஒரு பாம்பு என்ற எண்ணமே  அடியோடு மறைந்துவிட்டது! அன்பின் ஶக்தி இதுதானோ?."


மஹா பெரியவர் நமது தர்மமிகு சென்னையில், மைலாப்பூரில்,  ஸம்ஸ்க்ருத  கல்லூரி  வளாகத்தில் தங்கி இருந்தபோது தினமும் உபன்யாசம் பண்ணுவார்.  


அதில் ஒரு நாள் சொன்ன விஷயம்: 


''முன்னூறு வர்ஷங்களுக்கு முன்னால் இது  ஒரு  குடும்பத்திலே  நடந்த மிக மிக ஸ்வாரஸ்யமான ஒரு ஸம்பவம்.    


நான்  இதை  என்னுடைய  பால்ய வயஸில் கேட்டிருக்கேன்.    


"நா…. கொழந்தையா இருந்தப்போ, எங்களுக்கு தெரிஞ்ச ஒரு family-ல, அவங்க வீட்டுப் பொம்மனாட்டிகள் யாருமே தாழம்பூவ,   தலேல வெச்சுக்க மாட்டாங்க...!


"அந்தக் குடும்பத்ல ஏன் யாருமே தாழம்பூ வெச்சுக்கறதில்ல  ன்னு நா, ஒரு தடவை கேட்டப்போ, இந்தக் கதையை, எங்க வீட்டுப் பெரியவர்கள்ளாம் சொன்னார்கள்…! 


அது மட்டும் இல்ல, இன்னிக்கும் அந்த வம்ஸத்ல யாராத்துலயாவுது…. ஆம்பளைக் கொழந்தை பொறந்தாக்க… நாகராஜன்-னோ, நாகேஶ்வரன்-னோதான் பேர் வெப்பாளாம்!


(எங்கள் நெருங்கிய உறவில் ஒரு  குடும்பத்தில் ஒவ்வொரு தலைமுறையிலும்  ஆனாங்க இருந்தால் நாகராஜன், நாகநாதன், நாகேசன், நாகேஸ்வரன்,  நாக பூஷணம் மாதிரிப் பெயர்கள். 


பெண்ணாக இருந்தால், நாகம்மா  நாகமணி,  நாகேஸ்வரி,  நாகு  என்று  ஏதாவது ஒரு நாகம் பெயர் இன்றும் வைக்கிறார்கள்.


எத்தனையோ வருஷங்களுக்கு முன்னாள்  சமஸ்க்ருத கல்லூரி  வளாகத்தில்  நல்ல கும்பலாக இருந்த பக்தர்கள் அனைவரும்  காதுகளைத் தீட்டிக் கொண்டு, நாகபூஷண, நாகஸயன, நாகரூபமான அந்த தெய்வமே சொல்லப் போகும் கதையைக் கேட்க  தயாராக  இருந்தார்கள்.!   


பேசும் தெய்வத்தின் குரல் ஸன்னமாக  மைக்கில்  ஒலித்தது எல்லார் காதுகளிலும் விழுந்தது. 


"ஒரு க்ராமத்ல, ஒரு பொண்ணுக்கு…. 'நல்லபாம்பு' ஒண்ணு, கொழந்தையா பொறந்துது! 


என்ன? ஆஸ்சர்யமா இருக்கோ?… மனுஷக் கொழந்தைக்கு பதிலா, அவ.. பெத்து எடுத்தது, ஒரு நல்லபாம்பு! 


மொதல்ல எல்லாரும்… கொஞ்சம் என்ன? ரொம்பவே பயந்தா!… அப்றம் அந்த பாம்புக் குட்டியை ஒரு கொழந்தையாட்டம் நெனச்சு, அதுக்கு "நாகராஜன்"ன்னு பேர் வெச்சா…….


…..அதுவும், கொழந்தையாட்டம்… ஆத்துல வளைய வந்துது.


'நாகராஜா!'..ன்னு கூப்ட்டா, அவன் திரும்பிப் பாப்பான்! வா-ன்னு கூப்ட்டா வருவான்.! மடில ஏறிப் படுத்துப்பான்.! 


யாரையும் பாத்து பயப்படவும் மாட்டான், யாரையும் பயமுறுத்தவும் மாட்டான்! 


மொத்தத்ல எல்லார்க்கும் ஸந்தோஷத்தைத்தான் குடுத்துண்டிருந் தான்….

நாகராஜன்… 


வெறும் பால்தான் ஸாப்டுவான். அதுனால, அவன் பால் ஸாப்டறதுக்காக, கூடத்ல [living room] சின்னதா பள்ளம் பண்ணி வெச்சிருந்தா. 


பாலைக் காய்ச்சிட்டு, நன்னா ஆறினதும், அந்தக் குழில விட்டுட்டா…… அவன் வந்து குடிச்சுட்டுப் போவான்.


தெனோமும்… காலேல பத்தரை மணிக்கு அவனோட குழில… பாலை விடறது வழக்கம்….


இப்டியா ஒரு நா….. அந்த அம்மாக்கு.. அடுத்த க்ராமத்ல ஒரு ஸொந்தக்காரா கல்யாணத்துக்கு போக வேண்டியிருந்துது. 


அவளுக்கு, தன்னோட பாம்புக் கொழந்தையையும் தங்கூட அழைச்சிண்டு போகணும்னு ரொம்ப ஆசை. ஆனா, பாம்பைத் தூக்கிண்டு போனா… ஒண்ணு,   மத்தவா எல்லோரும்  கேலி செய்வா !இல்லாட்டா.. பயப்படுவான்னு தோணித்து. 


அதுனால, ஆத்துல இருந்த ஒரு பாட்டிகிட்ட, நாகராஜனைப் பாத்துக்கொங்கோ  என்று  சொல்லிட்டு,   அந்த  அம்மா  ஆத்திலே எல்லாரும் கல்யாணத்துக்குபி புறப்பட்டுட்டா. !


அந்தப் பாட்டிக்கி… கண்ணு ஸெரியா தெரியாது! ஆகையினால, தன்னோட ஸ்நானம், ஸமையல் எல்லாத்தையுமே ரொம்ப நிதானமாத்தான் பண்ணுவா….


அதுனால அன்னிக்கும், அவளோட எல்லாக் கார்யத்தையும் முடிச்சுண்டு, நாகராஜனுக்கு பாலைக் காய்ச்சி கொண்டு வரதுக்குள்ள, மணி கிட்டத்தட்ட மத்யானம்… 1 மணி ஆய்டுத்து!


பாவம்! கொழந்தை நாகராஜன் பட்னியாக் கெடந்தான்!


வழக்கமா… பத்தரை மணிக்கி, கூடத்துக் குழில தனக்கான பாலைத் தேடித் பாத்துட்டு, பால் இல்லாததால, பஸியோட அந்தக் குழிலேயே சுருண்டு படுத்துண்டுட்டான்….கொழந்த!


இந்தப் பாட்டியோ, மத்யானம் 1 மணிக்கி பாலைக் காய்ச்சிட்டு, கண்ணு தெரியாததுனால, நாகராஜன் அந்தக் குழிக்குள்ள படுத்துண்டு இருக்கறது தெரியாம, அப்டியே சுடச்சுட பாலை அந்தக் குழிக்குள்ள விட்டுட்டா!…..


இதை இத்தனை வருஷங்கள்  கழித்து இன்று  நாம் படிக்கும் போதே, நமக்குள்  ஏதோ ஒரு வேதனை ஏற்படுகிறது அல்லவா. அது தான்  பாசம் என்பது.     


அடிவயிற்றைக்  கலக்கி, மனஸை பதைபதைக்க வைக்கிறதே  அது மஹா கொடிய விஷமுள்ள  நாகப் பாம்பு என்று  இதை படிக்கும் யாருக்காவது மனதில் தோன்றுகிறதா?   


ஐயோ, அந்தக் குழந்தை கதி  என்ன ஆயிற்று என்று தானே நினைக்க வைக்கிறது?   


நம் நினைவிலிருந்து  கொடிய விஷம் கொண்ட ஒரு பாம்பு என்ற எண்ணமே  அடியோடு மறைந்துவிட்டது! அன்பின் ஶக்தி இதுதானோ?. 


பகவான் நாம்  எவ்வளவு கொடியவர்களாக நாம் இருந்தாலும்  நம்மை எவ்வளவு ப்ரேமையுடன் பரிபாலிக்கிறான், அருள் கிறான் என்று புரிகிறதா?


பாவம்..அந்த  சின்ன  பாம்புக்   கொழந்த…. அப்டியே…. வெந்து, கருகி, அப்டியே… செத்துப் போய்ட்டான்! 


பாலுக்காக காத்துண்டிருந்த    பசியோடு இருந்த   அந்தக்  கொழந்தை நாகராஜனுக்கு, அந்தப் பாலே…..எமனா முடிஞ்சுடுத்து!


தூரத்தில்   எங்கேயோ ஒரு ஊரிலே  கல்யாணம் தடபுடலா  நடக்கிறது.  அந்தக்  கல்யாண ஆத்துல… எங்கேயோ ஒரு   மூலையிலே ராத்ரி தூங்கிண்டிருந்த அம்மாக்காரியோட  கனவிலே   அவளோட அருமைப் பிள்ளை செல்லக்குட்டி  நாகராஜன் வந்தான்.  எழுப்பினான்.

  

 "அம்மா! பாட்டி, எம்மேல கொதிக்கற பாலை ஊத்திட்டா…! நா… செத்துப் போய்ட்டேன்! என்னை தாழம்பூ காட்டுல பொதைச்சிடுங்கோ! நா… தெய்வமா இருந்து ஒங்களையெல்லாம் காப்பாத்தறேன்"ன்னு சொன்னான்.


ஐயோன்னு கத்தினா  அந்த அம்மா. பாவம்! பெத்த வயறு பத்தி எரிஞ்சுது! ஒடனேயே தன்னோட க்ராமத்துக்கு ஓடி வந்தா… அந்த   ஆசை அம்மாக்காரி !


கருகிப் பொணமா கெடந்தத் தன்னோட பாம்புக் கொழந்தையை  எடுத்து மடிலே போட்டுண்டு நெஞ்சு வெடிக்கிறமாதிரி  ஒரு பாட்டம் கதறித் தீர்த்தா.  


கண் சரியாத் தெரியாத   பாட்டியையும்  கருகிப்போன  பாம்புக் குழந்தையையும்  மாறி மாறி பாத்து  கதறி அழுதா! …..வேறே என்ன பண்ணுவா?


"ஐயோ! பாட்டி! என்ன கார்யம்   பண்ணிட்டே நீ.   என்  கொழந்தையைப் பாத்துக்கச் சொன்னா, அவனை பரலோகத்துக்கே அனுப்பிச்சுட்டியே  பாட்டி.  


உன்னை நம்பித்தானே என் செல்வத்தை உன்கிட்ட ஒப்படிச்சுட்டு இந்த மஹா பாவி போனேன்னு அலறினா…


அந்தப் பாட்டியும், பாவம்… கண்ணு தெரியாததால தான் பண்ணின தப்பை நெனச்சு, குமுறிக் குமுறி அழுதா….!


….அருமையா, செல்லமா வளர்த்த கொழந்தை நாகராஜனை, பக்கத்ல இருந்த தாழம்பூ தோட்டத்ல   அவன் கேட்டதுண்டா  மாதிரியே  பொதைச்சா…! 


அந்த ஶோகமான ஸம்பவத்தால, அந்தக் குடும்பத்ல, பரம்பரை பரம்பரையா பொம்மனாட்டிகள் யாருமே தாழம்பூவை தலைக்கு வெச்சுக்க மாட்டாளாம்…!


இந்த பரம்பரைல வந்திருக்கற ஒரு குடும்பத்தை, வடஆற்காடு மாவட்டத்ல போளூர்கிட்ட ஒரு க்ராமத்ல ஸந்திச்சிருக்கேன்…..!


அவா… எங்கிட்ட ஒரு தாம்ர [copper] ஸாஸனத்தை காட்டினா…! அது அச்சுததேவராயர் குடுத்த ஸாஸனம்! 


ராஜா…அவாளுக்கு அஞ்சு க்ராமங்களை தானமாக் குடுத்திருக்கார்.


ஆனா, ராஜப்ரதிக்ரஹ தோஷத்துக்காக, அவா, அதுலேர்ந்து 108 ப்ராஹ்மணாளுக்கு தானம் பண்ணியிருக்கா. 


அந்த ஸாஸனத்ல, பேரைப் பாத்தா… நாகராஜன், நாகேஶ்வரன்னுதான் நெறைய இருக்கு….!"

பெரியவா கதையை முடிச்சா.  


அங்கிருந்த பலர் கண்ணீரால் நிரம்பிய கண்களைத் துடைத்துக் கொண்டனர். 


அந்தக் கடும் விஷமுள்ள பாம்புக் குட்டியிடம் கூட, "தான், தன்னுடையது" என்ற அபிமானத்தை, கதை கேட்ட நாமும் வைத்துவிட்டதால், அதன் ஶோகமான முடிவு, நம்மை கலங்க அடிக்கிறது. 


இதே அபிமானத்தை அத்தனை ஜீவராஸிகளிடமும் வைத்துவிட்டால், லோகமே அன்பு மயமாக ஆகிவிடாதா!....


பெரியவாளுடைய மெட்ராஸ் விஜயத்துக்கு பின், பல வர்ஷங்களுக்குப் பிறகு, பெரியவாளின் அனுக்ரஹத் தோடு ஶ்ரீ பரணீதரன், பர்வதமலைக்கு சென்று வருவதற்காக, கடலாடியில் உள்ள மணியக்காரர் ஶ்ரீ நாகேஶ்வரன் வீட்டுக்கு சென்றார்.


அவரைத் தகுந்த துணையோடு பர்வதமலைக்கு அனுப்பி வைத்தவர் ஶ்ரீ நாகேஶ்வரன். 


400 வர்ஷங்களுக்கு முன் விஜயநகர ஸாம்ராஜ்யத்தை ஆண்ட அச்சுததேவராயர், இவருடைய முன்னோர்களுக்கு பல க்ராமங்களை மான்யமாக வழங்கியதற்கான தாமிரப்பட்டயங்களை பரணீதரனிடம் காட்டினார்.


அதோடு, தங்கள் வம்ஸத்தில்தான் ஒரு பெண்ணுக்கு, நல்லபாம்பு குட்டி பிறந்த கதையையும் சொன்னார்….!


பெரியவா சொன்னது வெறும் பொழுதுபோக்கு கதையல்ல! நிஜமாகவே நடந்த ஒரு ஸம்பவம்!


அதோடு மிகமிக முக்யமான இன்னொரு விஷயம்……


ஶ்ரீ பரணீதரன் ஸந்தித்த ஶ்ரீ நாகேஶ்வரன் வேறு யாருமில்லை….. ஸாக்ஷாத் நம்ம பெரியவாளின் பூர்வாஶ்ரம மூத்த ஸஹோதரர் ஸ்ரீ கணபதி ஶாஸ்த்ரிகளின் மாப்பிள்ளைதான்! 


அவருடைய மனைவிக்கு, நம்ம பெரியவா…. பூர்வாஶ்ரம ஸொந்த சித்தப்பா!


"பெரியவா… 1907-ல ஸ்வாமிகளா…. பட்டத்துக்கு வந்தப்போதான் நா…. பொறந்தேன்! அதுனால எங்க தாத்தா பெரியவாளின் அப்பா ஶ்ரீ ஸுப்ரஹ்மண்ய ஶாஸ்த்ரிகள் எனக்கு த்ருபுரஸுந்தரி-ன்னு பேர் வெச்சார்.."


ஶ்ரீ பரணீதரனுக்கு, தன் கையால் உப்புமாவை பண்ணிப் பறிமாறிக்கொண்டே, ஶ்ரீ நாகேஶ்வர ஐயரின் மனைவி சிரித்துக் கொண்டே  இதைக் கூறினாள்.


எப்பேர்ப்பட்ட பாக்யஶாலியான பரம்பரை.


மஹாபெரியவா திருவடிக்கே...


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

வெள்ளியங்கிரி சிவபெருமான்

 


வெள்ளியங்கிரி சிவபெருமான்   !பூலோகத்தில் தென்கயிலாயம் என்று சிவன் அருளிய, பூண்டி வெள்ளியங்கிரி மலைக்கு வந்த அவர், வெள்ளியங்கிரி மலையாக நின்ற ஈசனை மெய்மறந்து வணங்கினார். இந்த மலை கோவை பேரூரில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைந்துள்ளது. அந்த திருமாலின் திருமந்திரம் முழங்கும் நாரதர், முருகப்பெருமான் வாயிலாக சிவனின் தென் கயிலாயத்தை பற்றி அறிந்ததும், அதை தரிசிக்கும் ஆவல் கொண்டார்.

    அதற்காக அவர் பூலோகம் வந்தார். பூலோகத்தில் தென்கயிலாயம் என்று சிவன் அருளிய, பூண்டி வெள்ளியங்கிரி மலைக்கு வந்த அவர், வெள்ளியங்கிரி மலையாக நின்ற ஈசனை மெய்மறந்து வணங்கினார். இந்த மலை கோவை பேரூரில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைந்துள்ளது.  ஓம் நமோ நாராயணா' என்று அணுநேரமும் திருமாலின் திருமந்திரத்தை உச்சரிக்கும் நாரதர், சிவபெருமானை வழிபட்ட தலம் இது.இன்று 22/8/2021 ஞாயிறு பௌர்ணமி அன்று  பதிவு செய்து வணங்குகின்றோம். சிவாயநம.

    ஒரு முறை திருமாலின் கையில் இருந்த திருச்சக்கரம் செயலிழந்து விட்டது. ஆதலால் ஜலந்தாரன் என்ற அசுரனை வதம் செய்ய சக்கரம் வேண்டி ஈசனை வழிபட்டார் திருமால். தினமும் ஆயிரம் தாமரை மலர்களைக் கொண்டு வழிபட்ட திருமாலுக்கு, ஒருநாள் ஆயிரம் மலர்களில் ஒன்று குறைந்தது. எனவே தனது வலது கண்ணை, தாமரையாக பாவித்து ஈசனுக்கு அர்ச்சித்தார். இதையடுத்து அவருக்கு சிவபெருமான் சுதர்சன சக்கரத்தை வழங்கினார்.

    அந்த திருமாலின் திருமந்திரம் முழங்கும் நாரதர், முருகப்பெருமான் வாயிலாக சிவனின் தென் கயிலாயத்தை பற்றி அறிந்ததும், அதை தரிசிக்கும் ஆவல் கொண்டார்.

    அதற்காக அவர் பூலோகம் வந்தார். பூலோகத்தில் தென்கயிலாயம் என்று சிவன் அருளிய, பூண்டி வெள்ளியங்கிரி மலைக்கு வந்த அவர், வெள்ளியங்கிரி மலையாக நின்ற ஈசனை மெய்மறந்து வணங்கினார். இந்த மலை கோவை பேரூரில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைந்துள்ளது.

  திருவெள்ளியங்கிரி மலை மீது ஏறி உமாதேவி சமேதராக காட்சியளித்த சிவனையும், விநாயகர், முருகப்பெருமானையும் தரிசித்தார். அது மட்டுமின்றி அதற்கு மேற்கு திசையில் எழுந்தருளிய சிவலிங்கத்திற்கும் பூஜை செய்து வழிபட்டார். பின்னர் பேரூர் திருத்தலம் வந்தார். உத்தர வாகினியாக ஓடிய காஞ்சிமாநதியில் புனித நீராடி, அரச மரங்கள் சூழ எழுந்தருளியிருந்த ஆதிலிங்க மூர்த்தியை கண்டு உணர்ந்து மலர்கள் தூவி தரிசித்தார்.

    பிறகு காஞ்சிமா நதிக்கரையோரம் ஒரு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபடத் தொடங்கினார். தினமும் காஞ்சிமாநதியில் புனித நீராடி, தான் உருவாக்கிய தீர்த்தத்தில் இருந்து தீர்த்தம் எடுத்து சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்வார். இந்த வழிபாட்டின் பலனாக ஈசனின் பரிபூரண அருளை நாரதர் பெற்றார்.

    நாரதர் வழிபட்ட லிங்கம் ‘நாரதேஸ்வரர்’ என்றும், தீர்த்தம் ‘நாரத தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது. கால வெள்ளத்தில் நாரதர் வழிபட்ட நாரதேஸ்வரரும், தீர்த்தமும் அழிந்து விட்டது. ஆனால் அவர் வழிபட்ட ஆதிலிங்க மூர்த்தி, பட்டீசுவரராக எழுந்தருளி உள்ளார். அவரை தரிசிக்க நாம் பேறு பெற்று உள்ளோம்.

    பிரம்மனின் புத்திரர் காஸ்யப முனிவர். இவரது மகன் காலவ முனிவர். இவர் சிவபக்தியில் சிறந்து விளங்கினார். நன்மை, தீமை, ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றைக் கடந்து பேரின்பத்தை அடைய வேண்டும் என்ற ஆவல் அவருக்கு உண்டாயிற்று.

    சிவபெருமானின் மற்ற மூர்த்தங்களை விட, அனைத்திற்கும் மூலமாக, அருவுருவ திருமேனியாக விளங்கும் சிவலிங்க மூர்த்தியை வணங்கினால் வீடுபேறு என்னும் முக்தி கிடைக்கும் என்பதை அறிந்து, சிவலிங்கத்தை வழிபட முடிவு செய்தார் காலவ முனிவர்.

    ஈசன், சிவலிங்க திருமேனியாய் எழுந்தருளிய திருத்தலங்களில் எது சிறந்தது? என்பதை அறிய, சிவன் எழுந்தருளியிருக்கும் இடமெல்லாம் சென்று வழிபடத் தொடங்கினார். காஞ்சிமா நதி ஓடும் ஆதிமாபுரம் என்று அழைக்கப்படும் திருப்பேரூரை அடைந்ததும், காலவ முனிவரின் வலது கண்ணும், வலது தோளும் தானாகத் துடித்தன. துன்பங்கள் நீங்கச் செய்யும் இந்த இடமே நாம் வழிபடுவதற்கு ஏற்றது என்று மகிழ்ந்தார்.

    காஞ்சிமா நதியில் புனித நீராடி ஆதிலிங்க மூர்த்தியான பட்டீசுவரரை தரிசித்தார். வேத, மந்திரங்கள் உச்சரித்து வணங்கினார். அன்று முழுவதும் சிவசிந்தனையில் ஆழ்ந்தார்.

    மறுநாள் காலையில் எழுந்து காஞ்சிமாநதி கரையோரம் ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, ஒரு தீர்த்தத்தையும் உண்டாக்கினார். அந்த தீர்த்தத்தில் இருந்து தினமும் சிவலிங்க திருமேனிக்கு அபிஷேகம் செய்து, 16 ஆயிரம் முறை பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்து வந்தார். இப்படியே 16 ஆயிரம் ஆண்டுகள் கடும் தவம் செய்தார். காலவ முனிவரின் தவத்தை மெச்சிய சிவபெருமான், அவர் கண்முன் தோன்றினார்.

    காலவ முனிவரே! யாம் உமது தவத்தை மெச்சினோம். யாது வரம் வேண்டும். கேளீர்' என்றார்.

    இதைக் கேட்ட காலவ முனிவர், ‘எம்பெருமானே! இந்த பூத உடலில் உள்ள மலங்களை நீக்கி, உன் திருவடியை நாடும் பாக்கியம் பெற்ற விடுபேறை வழங்கி அருள்புரிவாயாக' என்றார்.

    ‘யாம் அந்த வரத்தை தந்தோம். இந்த வெள்ளியங்கிரியில் வெள்ளியம்பலம் ஒன்று உள்ளது. அதை வழிபடுகிற அன்பர்களின் வினைகள் தீரும் பொருட்டு நாள்தோறும் அனபரத ஆனந்த தாண்டவம் செய்கிறோம். நீங்கள்! இங்கு எழுந்தருளிய அரசம்பலவாணரை வழிபட்டு காத்திருங்கள். பிரம்மன், விஷ்ணு, யாம் இங்கு நடனம் ஆடும் திருக்காட்சியை தரிசிக்க உள்ளனர். நீங்களும் அந்த நடன காட்சியை தரிசித்து இப்பூத உடல் அழிந்து விடுபேற்றை பெறுவீர்கள்’ என்று அருள்பாலித்தார்.

  அதன்படியே அங்கேயே கடும் தவம் இருந்து, பின்னாளில் சிவபெருமானின் அந்த திருக்கூத்தை கண்டுகளித்து வீடு பேற்றை அவர் பெற்றார்.

    காலவ முனிவர் ஸ்தாபித்த கோவிலுக்கு காலவேஸ்வரம் என்றும், அவர் ஏற்படுத்திய தீர்த்தத்திற்கு காலவ தீர்த்தம் என்றும் பெயர். இன்றும் அவர் ஸ்தாபித்த லிங்கத்திருமேனியை தரிசிக்கும் பாக்கியம் நமக்கும் கிடைத்திருக்கிறது.

    இந்த திருத்தலம் தற்போது உள்ள பேரூர் பட்டீசுவரர் கோவிலில் இருந்து வடகிழக்கில் உள்ளது. அது அரசம்பலவாணர் கோவில் என்று அழைக்கப்படுகிறது. காலவ முனிவர் ஏற்படுத்திய தீர்த்தத்தையும் அங்கு பார்க்கலாம். அந்த தீர்த்தத்தில் இருந்து தான் இன்றும் அந்த கோவிலில் அரசம்பலவாணருக்கு நித்ய பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதை பேரூர் கோவிலின் ‘சின்னக்கோவில்’ என்று அழைக்கின்றனர்.

சிவாயநம

அருள்மிகு லட்சுமிநாராயணப் பெருமாள் திருக்கோயில்

 தினம் ஒரு திருத்தலம் : கிழக்கு நோக்கிய பெருமாள்... அற்புதமாக காட்சி தரும் தலம்.!!

கிழக்கில் விக்ரமன் என்னும் காவிரியாறும், மேற்கில் கிளை நதியான காளி வாய்க்காலும் அமைந்திருக்க நடுவில் அமைந்துள்ள தலம் தான் மேலத்திருமணஞ்சேரி லட்சுமிநாராயணப் பெருமாள் திருக்கோயில் ஆகும். அங்கேதான் திருமணத்திற்கு வந்த தேவர்களையெல்லாம் விஷ்ணு வரவேற்றாராம். அதனால் அது எதிர்கொள்பாடி என்று பெயர் பெற்றது.



கோயில் சிறப்பு :


பொதுவாக கோயில்களில் பெருமாள் கிழக்கு நோக்கி எழுந்தருளியிருப்பார். ஆனால், இங்கு மேற்கு நோக்கி அருள்பாலிப்பது சிறப்பு.


இதற்கு காரணம் தம்பதிகளான கோகிலாம்பாளும், கல்யாண சுந்தரரும் கிழக்கு நோக்கி அமர்ந்திருந்தபோது, மைத்துனராக விஷ்ணு திருமணத்தை நடத்தி வைக்க, மேற்கு நோக்கி அமர்ந்தார் என காரணம் சொல்கின்றனர்.


சோழநாட்டில் உள்ள திவ்யதேசங்களில் இத்தலம் அபிமானத்தலமாகத் திகழ்கிறது.


கையில் அமிர்தகலசம் தாங்கிய கோலத்தில் வடக்கு நோக்கி தன்வந்திரி தனி சந்நிதியில் வீற்றிருக்கிறார்.


தம்பதி சமேதராக இருந்து சிவ-பார்வதியும், ஸ்ரீலட்சுமியும்-ஸ்ரீநாராயணரும் குடிகொண்டிருக்கும் அற்புதத் தலம் இதுவாகும்.


இக்கோயிலில் தும்பிக்கையாழ்வார், வீர ஆஞ்சநேயர், கிருஷ்ணர், கருடாழ்வார், ஐந்து தலைநாகர், ராமானுஜர் சந்நிதிகள் உண்டு.


கோயில் திருவிழா :


வைகுண்ட ஏகாதசி, ராம நவமி, கருட ஜெயந்தி, அனுமன் ஜெயந்தி ஆகியவை கொண்டாடப்படுகிறது.


வேண்டுதல் :


சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு துளசி மாலை சாற்றி வழிபட்டால் சத்ரு பயம் நீங்கும். ராகுதோஷம் உள்ளவர்கள் ஐந் துதலை நாகருக்கு வெள்ளிக்கிழமை ராகுகாலத்தில் தீபமேற்றி வழிபடுகின்றனர்.


நேர்த்திக்கடன் :


ஆஞ்சநேயருக்கு துளசிமாலை, வடைமாலை சாற்றியும், நாகருக்கு ராகுகாலத்தில் தீபமேற்றியும், தன்வந்திரிக்கு நெய் தீபமேற்றியும் வழிபாடு செய்கின்றனர்.

மோட்சம் கொடுக்கும் பள்ளிக்கொண்ட பெருமாள்

 

வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கொண்டாவில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருமாள் கோவில் உள்ளது.


இங்கு தாயார் ரங்கநாயகிவுடன் பள்ளிக்கொண்டா பெருமாள் என்ற பெயரில் அருள் பாலிக்கிறார். இவர் சாளகிராமத்தால் ஆனவர்.


இவரை வணங்கினால் தடைபட்ட திருமணங்கள் சிறப்பாக நடக்கவும் பிரிந்த தம்பதிகள் சேரவும் இங்கு திருமணம் செய்தால் மணம் ஒத்து வாழ்வார்கள் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை.


பிராத்தனை நிறைவேறியதும் சுவாமிக்கும் அம்மபாளும் திருமஞ்சனம் செய்து துளசியால் அர்ச்சனை செய்கின்றனர்.


வராஹ அவதாரம் எடுத்தப் கூடலூர் வையங்காத்த பெருமாள் சிறப்புக்கள்


சோட்டா ரங்கநாதர்


அந்நியர் படை எடுக்கும் போது இங்குள்ள ரங்கநாதர் மறைக்கப்பட்டு சிறிய ரங்கநாதர் சிலை செய்து கோயிலில் பாதுகாக்கப்பட்டது.


இன்றும் கூட சிறிய ரங்கநாதருக்கு பூஜைகள் செய்யப்படுகிறது இவர் சோட்டா ரங்கநாதர் எனப்படுகிறார்.


இரவு தங்கி பெருமாளை வழிப்பட்டால் மோட்சம் கிடைக்கும்



பெருமாளுக்கு உதவியாக இருந்து வந்த ஆதிஷேசன் இத்தலத்தில் தான் முதல் முறையாக அவரை தன்னீல் சயனிக்க வைத்தார் என்கிறது தல புராணம்.


பின்னர் பெருமாள் பாற்கடலில் பள்ளி கொண்டதால். இத்தலத்து ஆறுக்கு பாலாறு என்று பெயர் ஏற்பட்டது. இத்தலத்தில் ஒரு நாள் இரவு தங்கி பெருமாளை வழிப்பட்டால் மோட்சம் கிடைக்கும் என பிரமாண்ட புராணம் கூறுகிறது.


பூலோகத்தில் விரும்பி வந்து பள்ளி கொண்ட இடம்


மகாலட்சுமிக்கும், சரஸ்வதிக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற சர்ச்சை ஏற்பட்டது. இதற்கு தீர்ப்பு கூறும்படி இருவரும் பிரம்மனிடம் சென்றனர்.


மகாலட்சுமி தான் பெரியவர் என பிரம்மா தீர்ப்பு கூறினார். இதனால் சரஸ்வதிக்கு கோபம் ஏற்பட்டு, பூலோகத்திலுள்ள சாசிய மலையில் தனது நிலை உயர வேண்டி தவம் செய்யத் தொடங்கினாள்.


இந்நிலையில் பிரம்மா பெருமாளுக்கு சிறப்பு செய்வதற்காக ஒரு யாகம் தொடங்கினார். நியதிப்படி யாகத்தை தம்பதி சமேதராக நடத்த வேண்டும். ஆனால், சரஸ்வதி யாகத்திற்கு வர மறுத்தாள்.


எனவே பிரம்மா, சரஸ்வதியின் அம்சமாக ஒரு பெண்ணைப் படைத்து, அவளுக்கு சாவித்திரி என பெயர் சூட்டி, அவளையே மணந்து யாகத்தை தொடங்கினார்.


இதனால் மேலும் கோபமடைந்த சரஸ்வதி, பிரம்மன் ஆரம்பித்த இந்த யாகத்தை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ‘க்ஷீரநதி’ என்ற பெயரில் நதியாக மாறி, வெள்ளப்பெருக்கெடுத்து யாக குண்டத்தை உடைக்கும் நோக்கத்தில் ஓடிவந்தாள்.


இதனால் பிரம்மா, பெருமாளின் உதவியை நாடினார். பெருமாள், சரஸ்வதியை சமாதானம் செய்தார்.


முன்னதாக, அவர் நதியின் ஓட்டத்தை தடுக்க, ஆதிசேஷனை நதியின் குறுக்கே படுக்க வைத்து, அதில் சயனித்தார். பின்னர், பிரம்மா யாகத்தை சிறப்பாக முடித்தார்.


2017 சரஸ்வதியும் சாவித்திரியும் ஒன்றே என்பதை விளக்கிய பெருமாள், அவளை பிரம்மனுடன் மீண்டும் இணைத்து வைத்தார்.


பெருமாள் பூலோகத்தில் விரும்பி வந்து பள்ளி கொண்ட இடம் என்பதால், இவ்வூர் ‘பள்ளி கொண்டான்’ எனப்பட்டது. பெருமாள் ‘உத்தர ரங்கநாதர்’ எனப்படுகிறார்.


இத்தலத்தில் நிறைய திருமணங்கள் நடக்கின்றன. இங்கு திருமணம் செய்து கொண்டால், தம்பதியர் மனமொத்து வாழ்வர் என்பது நம்பிக்கை.


அந்நியர் படையெடுப்பின் போது, இங்குள்ள ரங்கநாதர் மறைக்கப்பட்டு, சிறிய ரங்கநாதர் சிலை செய்து, கோயில் பாதுகாக்கப்பட்டது. இன்றும் கூட சிறிய ரங்கநாதருக்கும் பூஜைகள் செய்யப்படுகிறது.


இவர் ‘சோட்டா ரங்கநாதர்’ எனப்படுகிறார். தனி சன்னதியில் தாயார் ரங்கநாயகி இருக்கிறார். உள்பிரகாரத்தில் உடையவர், ராமர், நவநீதகண்ணன், ஆண்டாள், அனுமன், மணவாள மாமுனிகள், கருடாழ்வார், குலசேகர ஆழ்வார், நம்மாழ்வார் சன்னதிகள் உள்ளன.


இக்கோயிலுக்கு தெற்கே 2 கி.மீ. தூரத்தில் பீஜாசலம் என்ற மலைக்குன்று உள்ளது.


திருவிழா


சித்திரையில் பிரமோற்ஸவம், வைகாசி விசாகத்தில் கருடசேவை, ஆனியில் ஜேஷ்டா திருமஞ்சனம். ஆடி வெள்ளிக்கிழமைகளில் திருவாடிப்பூரம். கிருஷ்ண ஜெயந்தி, நவராத்திரி. திருக்கார்த்திகை. வைகுண்ட ஏகாதசி. தை மாதம் கிரிபிரதட்சணம். மாசி தெப்பம். பங்குனி உத்திரம்.


காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.


அமைவீடம்


வேலூரில் இருந்து பள்ளிக்கொண்டா 30 கி.மி தொலைவில் உள்ளது இங்கு செல்ல பேருந்து வசதி உள்ளது .

எப்படிப்பட்ட கெட்ட சக்தியையும் ஓட ஓட விரட்ட 8 சனிக்கிழமை இந்த ஒரு தீபத்தை ஏற்றினால் போதும்.

 
SRI MAHA VARAHI

        கண்ணுக்குத் தெரியாத கெட்ட சக்திகள் இந்த உலகத்தில் உலாவிக் கொண்டுதான் கொண்டிருக்கின்றது என்பதை சொன்னால் சிலர் கட்டாயமாக நம்ப மாட்டார்கள். ஆனால் கெட்ட சக்திகளின் மூலம், அனுபவப்பூர்வமாக சில பிரச்சனைகளை எதிர் கொண்டவர்களுக்கு இதை பற்றி நன்றாக புரிந்து இருக்கும். ஆரம்ப காலத்திலேயே சொல்லி இருப்பார்கள் ‘உங்களின் வளர்ச்சியை பார்த்து, யாரோ ஒருவர் செய்வினை வைத்ததால் தான் இந்த பிரச்சனை எல்லாம் உங்களுக்கு வந்து கொண்டிருக்கின்றது’ என்று. 

    இதை நல்ல நிலைமையில் இருக்கும் வரை யாரும் நம்பாமல் இருப்பது இயற்கை தான். கையில் இருக்கும் சொத்து, செல்வம், கௌரவம் இவை அத்தனையும் இழந்த பின்புதான் யோசிப்பார்கள். நமக்கு ஏதோ ஒரு கெட்ட சக்தியால் பிரச்சனை இருக்கின்றது என்பதை. ஆரம்ப காலத்திலேயே யோசித்திருந்தால் இவ்வளவு பெரிய இழப்புகள் ஏற்பட்டு இருக்காது அல்லவா? சரி பிரச்சினைகள் நமக்கு இருக்கிறது என்பதை உணர்ந்து விட்டோம். என்ன பரிகாரம் செய்தால், சுலபமாக நம்மை நாமே காத்துக் கொள்ள முடியும். 

    வாராஹி அம்மனை நினைத்து மனதார இந்த ஒரு தீபத்தை ஏற்றினால், உங்களை பிடித்திருக்கும் பில்லி, சூனியம், ஏவல் எப்படிப்பட்ட கெட்ட சக்தியாக இருந்தாலும் உங்களிடமிருந்து கண்காணாத தூரத்துக்கு ஓடிவிடும். இந்தப் பரிகாரத்தை எப்படி செய்யலாம் என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

    புதிதாக மண் அகல் விளக்கு ஒன்றை வாங்கி வீட்டில் வைத்துக் கொள்ளவும். கருநீல துணியை புதியதாக வாங்கி சிறிதளவு வெட்டி எடுத்து, திரி செய்யும் அளவிற்கு உருட்டி அதனுள் வெண்கடுகுகளை வைத்துக் கொள்ள வேண்டும். இப்படி தயார் செய்து கொள்ள முடியாதவர்கள், வெண்கடுகை கருநீல துணியில் சிறிய முடிச்சாக கட்டிக் கொள்ளலாம். 

    அகல் தீபத்தில் நல்லெண்ணெய் ஊற்றி, வெண்கடுகு திரியை அந்த எண்ணெயில் போட்டு தீபமாக வராகி அம்மனின் முன்பு ஏற்ற வேண்டும். வெண்கடுகை மூட்டையாக கட்டி வைத்திருப்பவர்கள் அந்த மூட்டையை அப்படியே தீபமாக ஏற்றி விடலாம். உங்கள் வீட்டின் அருகில் வராகி அம்மனின் சன்னிதானம் இருந்தால் அங்கு சென்று இந்த பரிகாரத்தை செய்யலாம். கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே வராகி அம்மன் படத்திற்கு முன்பாக இந்த தீபத்தை ஏற்றலாம்.

    தொடர்ந்து 8 வாரம் சனிக்கிழமைகளில் இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். சனிக்கிழமை காலை 6 – 7 மணிக்குள் அல்லது இரவு 8 – 9 மணிக்குள் இந்த நேரத்தில் தீபம் ஏற்றினால் தான் பலன் உண்டு. தீபம் ஏற்றும் இந்த 8 சனிக்கிழமைகளிலும் ஒரு வேளை உணவு அருந்தி விரதம் இருப்பது மேலும் நல்ல பலனை தரும்.

    சிலர் சொன்னாலும் நம்ப மாட்டீர்கள். நிறைய பேருக்கு சொந்த பந்தத்திற்கு உள்ளேயே பொறாமை வந்திருக்கும். சில குடும்பத்திற்கு ஆண் வாரிசு இருக்கும். சில குடும்பத்திற்கு ஆண் வாரிசு இருக்காது. சொத்துக்கள் அனைத்தும் ஆண் வாரிசு உள்ள குடும்பத்திற்கு சென்று விடுமோ! என்ற பொறாமை குணத்தின் கூட அந்த ஆண் வாரிசை அழிப்பதற்கு நிறைய சதிவேலைகள் நடக்கும். 

    இப்படிப்பட்டவர்களுக்கு கூட இந்த தீபத்தை ஏற்றி வராகி அம்மனை வழிபட்டால், எந்த ஒரு கெட்ட சக்தியையும் உங்கள் ஆண் வாரிசை நெருங்காமல் இருக்கும். வராகி அம்மனை வழிபடும் போது எந்த ஒரு தீய எண்ணத்தையும் மனதில் வைத்துக் கொள்ளக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

சக்தி சக்கர பயிற்சி

 நீங்கள் கற்பனை செய்து வைத்திருக்கும் உங்கள் வாழ்க்கையை, நிஜத்திலும் வாழவேண்டும் என்று நினைக்கிறீர்களா? சக்தி சக்கர பயிற்சி செய்யுங்கள். 

CHAKRA

        பொதுவாகவே ஒரு மனிதனுக்கு இரண்டு வாழ்க்கை இருக்கும். ஒன்று அவன் கற்பனையில் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை. மற்றொன்று நிஜத்தில் வாழும் வாழ்க்கை. சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருந்தால், பணக்கார வாழ்க்கையை கற்பனையில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். 

    பணக்கார வாழ்க்கையை நிஜத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் என்றால், கோடான கோடீஸ்வரர் வாழ்க்கையை கற்பனையில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். நோய் நொடியோடு நிஜத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு, ஆரோக்கியத்தோடு வாழ வேண்டும் என்று கற்பனை இருக்கும். இப்படியாக ஒருவருடைய கற்பனையான வாழ்க்கையை, நிஜத்தில் எப்படி கொண்டு வருவது?

    முதலில் விடா முயற்சி எடுக்க வேண்டும். தோல்வியை கண்டு பயப்படக்கூடாது. நம்முடைய கற்பனையான வாழ்கையை தினம் தினம் நம் மனதில் நினைவு கூர்ந்து கொண்டே இருக்க வேண்டும். ஏனென்றால் நாம் எது ஒன்றை விதைக்கிறோமோ, அதுதான் வளர்ந்து விருட்சமாகி நிற்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. சரி. நம்முடைய கற்பனையான வாழ்க்கையை நிஜமாக மாற்ற வேண்டும் என்றாலும், நமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்களில் ஏதாவது தீரவேண்டும் என்றாலும், அல்லது உங்கள் மனதில் எப்படிப்பட்ட ஒரு கோரிக்கை இருந்தாலும், நீங்கள் தொடர்ந்து ஒரு பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் அதை விரைவாகவே நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்று சொல்கிறது இந்த சக்தி சக்கர பயிற்சி.

    இந்த பயிற்சியை முறையாக எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். முதலில் உங்களுக்கு சௌகரியமான இடத்தில் அமைதியான சூழ்நிலையில் அமர்ந்து கொள்ள வேண்டும். அதன் பின்பு உங்களது இரண்டு கண்களையும் 5 நிமிடம் மூடிக்கொண்டு, உங்களது கண்களையே கவனிக்க வேண்டும்.

    அதாவது உங்களது கவனம் வேறு எங்கும் சிதற கூடாது. உங்கள் கண்களின் மீது தான் இருக்க வேண்டும். 5 நிமிடத்திற்கு பின்பு கண்களை திறக்க வேண்டாம். உங்களது கண்களை மிகவும் மெதுவான முறையில் திறக்க வேண்டும். கண்களை திறந்ததும் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் சக்தி சக்ராவின் மையப் புள்ளியை உற்று நோக்குங்கள், மூன்று நிமிடம் வரை.

    அதன்பின்பு திரும்பவும் உங்களது கண்களை 3 நிமிடம் மூடிக் கொள்ளுங்கள். மூன்று நிமிடம் கழித்து மீண்டும் சக்கரத்தை காண வேண்டும். இப்படியாக கண்களை மூடிக் கொள்ளும் அந்த சமயத்தில், உங்களது ஆசையை, கற்பனையான வாழ்க்கையை வாழ்வது போன்ற பாவனை செய்து கொள்ள வேண்டும். அதாவது உங்களுக்கு சொந்த வீடு கட்டி அதில் வாழ வேண்டும் என்ற விருப்பம் இருந்தால், அந்தக் காட்சியை உங்கள் கண்களுக்கு முன்பு கொண்டு வாருங்கள்.

    ஒருவரிடம் இருந்து கடன்தொகை வசூலாக வேண்டும் என்றாலும் கூட, அவரிடமிருந்து அந்த கடன் தொகை உங்கள் கைகளுக்கு வருவது போன்ற பாவனையை செய்துகொள்ளுங்கள். தீராத நோய் தீர வேண்டும் என்றாலும் அந்த நோய் தீர்ந்துவிட்டது என்ற பாவனை செய்து கொள்ளலாம். இப்படியாக பல வகைப்பட்ட பிரச்சினைகளுக்கும் இந்த பயிற்சியின் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.

ஏதாவது ஒரு ஆசையை தான் நிறைவேற்றுவதற்காக பயிற்சி எடுக்க வேண்டுமே தவிர, பல பிரச்சனைகளை போட்டு குழப்பிக்கொள்ளக்கூடாது. ‘இப்படியாக தொடர்ந்து கண்களை மூடுவதும், அதன் பின்பு சக்கரத்தைப் பார்த்தும் என்ற சுழற்சியில், உங்களது பயிற்சியை மேற்கொள்ளவேண்டும். (கண்களை மூடும் போது உங்களது ஆசையை பாவனை செய்துகொள்ள வேண்டும். கண்களை திறக்கும் போது சக்தி சக்கரத்தை மையப்புள்ளியை உற்று நோக்க வேண்டும். அவ்வளவுதான் பயிற்சி.) தினம்தோறும் உங்களுக்கு எந்த நேரம் வசதியாக இருக்கின்றதோ, அந்த நேரத்தில் இந்த பயிற்சியை மேற்கொள்ளலாம். தொடர்ந்து இதே போன்று 20 நிமிடம் பயிற்சியை தொடர வேண்டும்.

    தினம்தோறும் இந்த பயிற்சியை செய்து வந்தால், நீங்கள் கற்பனை செய்து வரும் அந்தக் காட்சியானது விரைவில் வெற்றி அடைய கூடிய சாத்தியக் கூறுகள் ஏற்படும். இந்த பயிற்சி அறிவியல்ரீதியான உண்மையும் கூட. ஆனால் எந்த ஒரு விஷயத்தையும் நடந்து முடிந்துவிட்டது போல் கற்பனை செய்து கொள்ளாதீர்கள். நடக்க வேண்டும் என்றவாறு கற்பனை செய்துகொள்ளுங்கள். நடந்து முடிந்த விஷயமாக கற்பனை செய்யும் பட்சத்தில், அது நம்முடைய மனதை விட்டும், மூளை விட்டும் விரைவாகவே நீங்கிவிடும்.

    எடுத்துக்காட்டாக ஒரு பொருளை அடையும் வரையில் தான் அதன் மேல் நமக்கு அதிகமான ஈடுபாடு இருக்கும். அந்த பொருள் நமக்கு கையில் கிடைத்து விட்டது என்றால், அதன் மேல் உள்ள ஆசையானது குறைந்து கொண்டே போகும். இது இயற்கையான ஒன்று. முறைப்படி இந்த பயிற்சியை செய்து வருவதன் மூலம், சக்தி சக்கரத்திற்கு எத்தனை ஆற்றல் உள்ளது என்பதை உங்களால் அனுபவபூர்வமாக உணர முடியும்.

Sunday, August 1, 2021

MAHA PERIYAVAA STORIES

 

"தெரியறதா ?"

 

பல வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்வு இது

மஹாபெரியவா அப்போது காஞ்சி ஸ்ரீமடத்தில் இருந்தார். மாலை வேளை….

 

மடத்து வாசலில் ஒரு சைக்கிள் ரிக்ஷா வந்து நின்றது. ரிக்ஷா ஓட்டி கீழிறங்கி வண்டியில் அமர்ந்திருந்த பெரியவர் ஒருவரைக் கைத்தாங்கலாக கீழே இறக்கி விட்டான். ‘என்னை மடத்துக்குள் கொண்டு விடப்பாஎன்பதாக அவனிடம் ஜாடையும் பேச்சும் கலந்து பெரியவர் சொல்ல மடத்துக்குள் அழைத்துச் செல்ல முற்பட்டான் ரிக்ஷா ஓட்டி.

 

கலைந்த தலையும் அழுக்கு லுங்கி அணிந்தபடியும் இருந்ததால், தான் இதே கோலத்தில் ஸ்ரீமடத்துக்குள் செல்வது உசிதமாக இருக்காது என்று ரிக்ஷா ஓட்டியே தீர்மானித்தான் போலும். எனவே, அங்கிருந்த மடத்துச் சிப்பந்தி ஒருவரை அழைத்துஐயாஇந்தப் பெரியவரு மடத்து சாமியைப் (மஹாபெரியவா) பார்க்கணுமாம்.

கூட்டியாந்திருக்கேன். கையைப் புடிச்சுக் கூட்டினு போ. சாமியைப் பார்த்து முடிச்சதும் வெளில என் வண்டி கிட்ட கொண்டு வுட்டுருஎன்று சொல்லிட்டு வெளியே போனான்.

 

பெரியவர் கைமாறினார்.

 

பெரியவருக்கு எப்படியும் வயது எண்பதுக்கு மேல் இருக்கும் என்று தோற்றம் சொன்னது.

 

உள்ளடங்கிய கண்கள், கோணல் மாணலாகக் கட்டிய நாலு முழ வேஷ்டி.. கசங்கிய வெள்ளைச் சட்டை. மேல் சட்டைப் பைக்குள் ஒரு மூக்குப் பொடி டப்பாவும் பத்துப் பதினைந்து ரூபாயும் தெரிந்தன.

 

தனியாக நடப்பதற்கே பெரிதும் சிரமப்பட்ட அந்தப் பெரியவரைக் கைத்தாங்கலாகப் பிடித்து, பெரியவா இருந்த இடம் அருகே விட்டார் சிப்பந்தி. மேடை போல் இருந்த ஓரிடத்தில் வசதியாக உட்கார்ந்து கொண்டார் பெரியவர். வலக் கையை நெற்றியில் வைத்து பெரியவா அமர்ந்திருந்த இடத்தைப் பார்த்தார்.

 

தான் இருந்த இடத்துக்கு எதிரே மஹாபெரியவா அமர்ந்திருப்பது அரைகுறையாக அவருக்குத் தெரிந்தது. இருந்த இடத்தில் இருந்தபடியே கன்னத்தில் போட்டுக் கொண்டு தரிசித்தார் பெரியவா.

 

பெரியவரைப் பார்த்துப் புன்னகைத்தார் மஹாபெரியவா. இந்தப் பெரியவர் இந்த சாயங்கால வேளையில் ஏன் இங்கே வந்திருக்கிறார் என்பதை அறியாதவரா அந்த மகான்?

 

ஒரு சிஷ்யன் ஓடோடி வந்து பெரியவா அருகே நின்றான். வாய் பொத்தி, ஏதோ ஒரு தகவலை குசுகுசுப்பாகச் சொன்னான். அதாவது பெரியவா தரிசனத்துக்காக அப்போது ஸ்ரீமடத்துக்கு சில முக்கிய பிரமுகர்கள் வந்திருப்பதாகவும், வெளியே அவர்கள் காத்திருப்பதாகவும் தகவல் சொன்னான். அன்று யாரையும் பார்க்க இயலாது என்றும் மறுநாள் காலை வருமாறும் தகவல் சொல்லி அனுப்பினார் மஹாபெரியவா. சிஷ்யன் ஓடிப் போய் விட்டான்.

 

தரிசனத்துக்கு வந்திருந்த ஒரு சிலருக்கும் பிரசாதம் கொடுத்து அனுப்பிவிட்டார் மஹாபெரியவா.

இப்போது அங்கு இருப்பது மஹாபெரியவாளும், உள்ளூர்ப் பெரியவரும் தான்.

 

இன்னமும் அந்தப் பெரியவர் தன் கண்களை இடுக்கிக் கொண்டு மஹாபெரியவா அமர்ந்திருந்த இடத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.

மஹாபெரியவா தன் ஸ்தானத்தில் இருந்து எழுந்தார். இறங்கினார். பெரியவரை நோக்கி நடந்தார்.

 

சிஷ்யர்கள் பிரமித்துப் போனார்கள். ஏனென்றால் எந்த ஒரு பக்தருக்கும் அனுக்ரஹம் செய்வதற்காக மஹாபெரியவா இது போல் எழுந்து சென்று அவர்கள் பார்த்ததில்லை.

 

காஞ்சிபுரத்துப் பெரியவர் தான் அமர்ந்த இடத்திலேயே இருக்கிறார். தள்ளாத வயது அல்லவா! அவர் அருகில் சென்ற மஹாபெரியவா தன் தலையில் வில்வமாலை ஒன்றை வைத்துக் கொண்டுதெரியறதாஎன்று கேட்டார் தீர்க்கமாக.

கண்களை மிகவும் இடுக்கிக் கொண்டு பார்த்த பெரியவர்தெரியலைஎன்றார்.

 

இதை அடுத்து தனக்கும் அந்த பெரியவருக்கும் நடுவில் இருந்த இடைவெளியை இன்னும் கொஞ்சம் சுருக்கினார் மஹாபெரியவா. அருகில் இருந்த ஒரு புத்தம் புது ரோஜா மாலையைக் கையில் எடுத்தார் மஹாபெரியவா. தலையில் வைத்துக் கொண்டார். அதை பெரியவா தன் சிரசில் அணிந்த பிறகு அந்த ரோஜா மாலை இன்னும் அழகாகத் தெரிந்தது. இப்போது பெரியவரைப் பார்த்துஇப்ப தெரியறதா? என்று கேட்டார் மஹாபெரியவா.

 

ரொம்பவும் சிரமப்பட்டு உற்றுப் பார்த்த பெரியவர்தெரியலைஎன்றார் மீண்டும்.

 

ரோஜா மாலையை எடுத்துத் தன் சிஷ்யனிடம் நீட்டினார் பெரியவா. அவன் ஓடோடி வந்து அதை வாங்கிக் கொண்டான். பிறகு ஒரு காஷாய வஸ்திரத்தை எடுத்து அதைத் தன் தலையில் வைத்துக் கொண்டார் மஹாபெரியவா. ‘இப்ப தெரியறதா…. பாருங்கோஎன்றார் மஹாபெரியவா.

 

ஊஹும்என்பதாகத் தன் உதட்டைப் பிதுக்கினார் பெரியவர்.

 

அப்போது அந்த இடத்தில் இருந்த சிஷ்யர்கள் குழம்பிப் போனார்கள். ‘தெரியறதா? என்று பெரியவா எதைக் கேட்கிறார், ‘தெரியலஎன்று பெரியவர் எதைச் சொல்கிறார் என்பது புரியாமல் தவித்துப் போனார்கள். சிஷ்யர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் கேள்விக் குறியுடன் பார்த்துக் கொண்டனர்.

 

அதற்குள் யாரோ ஒரு சில பக்தர்கள் பெரியவா இருந்த இடத்துக்குள் நுழைய முற்பட்டு அவரை தரிசிக்க யத்தனித்தார்கள். இதை அறிந்த பெரியவா அவர்களை சைகை காட்டி வெளியே அனுப்பினார். சிஷ்யர்களும் அவர்களிடம் ஓடிப் போய்இப்ப பெரியவா உங்களைப் பார்க்க மாட்டார்என்று சொல்லி அனுப்பினார்.

அந்த இடத்தில் பெரும் அமைதி நிலவியது.

தான் எதிர்பார்த்து வந்தது இன்னமும் நிறைவேறவில்லை என்பதாக இருந்தது

 

காஞ்சிபுரத்துப் பெரியவரின் முகம்.

காஞ்சிபுரத்துப் பெரியவர் எதை எதிர்பார்த்து வந்திருக்கிறார்?

 

அது மகா பெரியவாளுக்கும்  அந்தப் பெரியவருக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம்.

தண்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, பெரிய பெரிய ருத்திராட்ச மணிகளால் கோர்த்து வைக்கப்பட்டிருந்த ஒரு மாலையை எடுத்துத் தலையில் வைத்தவாறுதெரியறதாஎன்று கேட்டார் பெரியவா.

 

அவ்வளவு தான்அதுவரை ஏமாந்து போயிருந்த பெரியவரின் முகம் திடீரென பிரகாசம் ஆனது. அவரது விழிகளில் இருந்து தாரை தாரையாக நீர் வழிந்தது. ஏதேதோ பேச வாய் எடுத்தவருக்கு அந்தக் கணத்தில் அது முடியாமல் போனது.

மெள்ளச் சுதாரித்துக் கொண்டுஎல்லாமே தெரியறது பெரியவா. நல்லா தெரியறது பெரியவாஎன்று கன்னத்தில் மாறி மாறி அறைந்து கொண்டு அந்த பரப்பிரம்மத்தை நன்றியுடன் பார்த்தார். தன் இரு கைகளையும் கஷ்டப்பட்டு உயரே தூக்கி நெகிழ்ச்சியுடன் கும்பிட்டார் பெரியவர். பிறகு உடல் வளைந்து கொடுக்காவிட்டாலும் சிரமப்பட்டுத் தரையில் விழுந்து அந்தக் கருணை தெய்வத்தை உளமார வணங்கினார்.

 

பிறகு அந்தப் பெரியவரே மெள்ள எழுந்தார். பெரியவாளுக்கு முன்பாக நின்றார். அவரது திருமுகத்தையே நன்றியுடன் பார்த்துக் கொண்டிருந்தார். கண்களில் இருந்து கசியத் துவங்கிய நீர் வரத்து இன்னும் நிற்கவில்லை.

 

விரலைச் சொடுக்கி, சிஷ்யர்களை அருகே வரச் சொன்னார் மஹாபெரியவா. ஓடோடி வந்தனர்.

 

இவா வந்த ரிக்ஷா வெளில நிக்கும். அதுல பத்திரமா இவரை ஏத்தி அனுப்ச்சுட்டு வாங்கோ. சந்தோஷமாப் புறப்படட்டும்என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று அங்கிருந்து வெளியேறியது அந்தக் கலியுக தெய்வம்.

 

உடலிலும் உள்ளத்திலும் சந்தோஷம் கொப்பளித்த பெரியவரைக் கைத்தாங்கலாகக் கூட்டிக் கொண்டு ஸ்ரீமடத்தின் வாசலுக்குப் போனார்கள் சிஷ்யர்கள். தான் கூட்டி வந்த பெரியவர் வெளியே வருவதைப் பார்த்தவுடன், தரையில் குத்துக்காலிட்டு அமர்ந்திருந்த ரிக்ஷாக்காரன் ஓடோடி வந்தான். ‘வுடுங்க சாமிஇனிமே நா அவரை இட்டுகினு போயிடறேன்என்று சொல்லிவிட்டு, ரிக்ஷாவுக்குள் பெரியவர் ஏறி அமர்வதற்கு உதவி செய்தான்.

 

பெரியவரை ரிக்ஷாவுக்குள் ஏற்றி அனுப்பிய சிஷ்யர்கள் இருவரும் மடத்துக்குள் நுழையும் போது பேசிக் கொண்டார்கள்.

 

உனக்குப் புரியறதாடா பெரியவாதெரியறதா?ன்னு எதைக் கேட்டார்னு?- முதலாமவன்.

 

இல்லேடாஎன்னைவிட ரொம்ப வருஷமா நீ பெரியவாளுக்குக் கைங்கர்யம் பண்ணிண்டு இருக்கே….. உனக்கே புரியலேன்னா எனக்கு எப்படிப் புரியும்? இது இரண்டாமவன்.

 

நானும் எத்தனையோ பேரைப் பார்த்திருக்கேன். ஆனா, இது மாதிரி ஒரு அனுபவத்தைப் பார்த்ததில்லை. பெரியவா தெரியறதா? ன்னு எதைக் கேட்டார்னும் புரியல. ‘தெரியலனு அடிக்கடி அந்தப் பெரியவர் எதைச் சொன்னார்னும் புரியலை. ஆனா அவர் கண்ல ஜலம் வந்ததைப் பார்த்த உடனே என் கண்களும் ஈரமாயிடுச்சு. சமாச்சாரம்தான் என்னன்னு புரியாம ஒரே குழப்பமா இருக்குஎன்று சொன்ன முதலாமவன் கொட்டாவி விட்டுக் கொண்டு தூங்கப் போயிட்டான்.

 

இதற்கான விளக்கம் அடுத்த நாளே அனைவருக்கும் தெரிந்தது.

 

அடுத்த நாள் அதிகாலை அந்தப் பெரியவர் இறைவனடி சேர்ந்த செய்தி ஸ்ரீமடத்துக்கு யார் மூலமாகவோ வந்து சேர்ந்தது.

 

முதல் நாள் மாலை ஸ்ரீமடத்துக்கு இந்தப் பெரியவர் வந்த போது அவருக்கு உதவிய ஊழியர்களும் சிப்பந்திகளும் சிஷ்யர்களும் ஏகத்துக்கும் அதிர்ந்து போனார்கள்.

 

அனுபவம் வாய்ந்த ஸ்ரீமடத்து காரியதரிசிகளின் பேச்சில் இருந்து இதற்கான விளக்கம் அனைவருக்கும் கிடைத்தது.

 

தன் வாழ்நாளின் கடைசி நிமிடங்களில் இருப்பதை எப்படியோ உணர்ந்து கொண்டார் காஞ்சிபுரத்துப் பெரியவர். தன் தேகம் இந்தப் பூவுலகில் இருந்து மறைவதற்கு முன் கயிலைக் காட்சியைக் கண்டு தரிசிக்க விரும்பியிருக்கிறார். தான் விரும்பும் தரிசனம் எப்படியாவது மஹாபெரியவாளிடம் கிடைக்கும் என்று பரிபூரணமாக நம்பி ஒரு ரிக்ஷாக்காரரை அமர்த்திக் கொண்டு ஸ்ரீமடத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறார்.

 

தன்னை நாடி வந்த உள்ளூர்ப்பெரியவரின் ஏக்கத்தைத் தன் ஞான திருஷ்டியால் அறிந்து கொண்ட மஹாபெரியவா, கயிலைவாசியான அந்த ஈசனின் சொரூபத்தை அவருக்குக் காட்டி அனுக்ரஹித்து மோட்ச கதி கொடுத்தார் என்று இதற்கு விளக்கம் சொல்லப்பட்டது.

 

ஆக, பெரியவாளின் திருமுகத்தில் ஈஸ்வர தரிசனத்தைக் கண்டு பரவசம் கொள்ள வேண்டும் என்பதற்காகவே அந்தப் பெரியவர் ஸ்ரீமடத்துக்கு வந்திருந்தார் என்பது உறுதியானது.

 

சிவபெருமானின் ஓர் அம்சம் தான் மஹாபெரியவா என்று சொல்லப்படுவதுண்டு. இதை அனுபவப்பூர்வமாக உணர்ந்த சில பக்தர்கள் மஹாபெரியவாளை தரிசித்து, அத்தகைய தரிசனம் பெற்றிருக்கிறார்கள். அந்த வகையில் காஞ்சிபுரத்துப் பெரியவர் மறைவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன், அவருக்கு அத்தகைய ஒரு தரிசனத்தைக் காட்டி அருளி அருக்கிறார் மஹாபெரியவா.

 

அதனால் தான் ஒவ்வொரு முறையும்தெரியறதா? என்று பெரியவா கேட்ட போதும்தெரியலஎன்று சொல்லிக் கொண்டே வந்தவர், ருத்திராட்ச மாலையை எடுத்துத் தன் தலையில் வைத்துக் கொண்டதும், சாட்சாத் அந்த சிவபெருமானே பெரியவா முகத்திலே தரிசனம் தந்திருக்கிறார். இதற்கப்புறமும் அந்தக் காஞ்சிபுரத்துப் பெரியவருக்கு மோட்சம் கிட்டாமலா இருக்கும் !!!!