Sunday, July 25, 2021

MAHA PERIYAVAA STORIES

 "ரொம்ப சின்னவரா இருக்கார்  இவர்கிட்டே , எப்படி எங்க பிரச்னையைச் சொல்றது? அதுக்கு ஆலோசனை எப்படிக் கேட்கறது? இதெல்லாம் சரிவராதுன்னு தோணித்து. அதான் வெளியில வந்துட்டோம்!"- ஒரு தம்பதி (பெரியவா இளம் வயதில் இருக்கும்போது)


மகாபெரியவா சன்யாசம் ஏத்துண்டு ஆசார்யாளா பீடம் ஏத்துண்டு பத்துப் பன்னிரண்டு வருஷத்துக்கு அப்புறம் நடந்த சம்பவம் இது. அப்போ ஆசார்யாளுக்கு சின்ன வயசு. அவரோட  மகிமையெல்லாம் பலருக்கும் புரியாத காலகட்டம். மடத்துக்கு புதுசா வர்ற பக்தர்கள் பலர், ஆசார்யா இவ்வளவு சின்னவரா இருக்காரே இவர்கிட்டே நம்ம பிரச்னையைச் சொல்லலாமா? வேண்டாமா?ன்னு தயங்குவது உண்டு.


வேதம், புராணங்கள்ல சந்தேகம் கேட்க வர்றவாளா இருந்தா, இவருக்கு அதெல்லாம் தெரிஞ்சிருக்குமா? கேட்கலாமான்னு தயங்கி நிற்பா. சிலர் இன்னும் ஒருபடி மேலேபோய் இவர்கிட்டே எதுக்கு நம்ம குறையைச் சொல்லணம்னு அப்படியே திரும்பிப் போயிடலாம்னு நினைக்கறதும் உண்டு. ஆனா யாரா இருந்தாலும் ஒரே ஒருதரம் மகாபெரியவா முன்னால வந்து நின்னுட்டான்னா, அவாளோட எல்லா சந்தேகமும் போயிடும். உதிக்கறப்போ சூரியன் பால சூரியனாதான் இருக்கும். அது உச்சியில ஏறினத்துக்கு அப்புறம்தான் அதோட உக்ரம் தெரியும்கற மாதிரி, தொலைவுல இருந்து பார்க்கறச்சே, பாலகனா தெரியற பெரியவா முன்னால வந்து நின்னாதான், அவர் பாலகன் இல்லை, பரமேஸ்வரன்னே புரியும்.


அந்த மாதிரியான காலகட்டத்துல ஒருநாள், மகாபெரியவாளை தரிசனம் பண்ணறதுக்காக நிறைய பேர் மடத்துக்கு வந்திருந்தா. அவாள்ல, வெளியூர்லேர்ந்து காஞ்சிபுரத்துக்கு க்ஷேத்ராடனம் வந்த பக்தர் கூட்டம் ஒண்ணும் இருந்தது. காமாட்சியை தரிசனம் பண்ண  வந்த அவாள்லாம். இங்கே ஆசார்யா இருக்கார்னு தெரிஞ்சதும் அவரை தரிசனம் செய்ய வந்திருந்தா!


வந்தவாள்ல பலர் ஆசார்யாளை தரிசனம் பண்ணறது இதுதான் முதல் தரம்.சிலர் ஏற்கனவே வந்தவா. ஏற்கனவே வந்திருந்தவா, ஆசார்யாளோட பெருமையை வராதவாளுக்கு சொல்லிண்டு இருந்தா. அதையெல்லாம் கேட்டுண்டு, எல்லாரும் வரிசையாக வந்து மகா பெரியவாளை நமஸ்காரம் செஞ்சு அவர்கிட்டே ஆசிர்வாதம் வாங்கிண்டு புறப்பட்டுண்டு இருந்தா.


அப்போ அந்தக் கூட்டத்தோட வந்திருந்த ஒரு தம்பதி மட்டும் வரிசைலேர்ந்து பாதியிலயே

திரும்பி வெளியில போய் நின்னுட்டா.


அவாகூட வந்தவா எல்லாரும் மகாபெரியவாளை தரிசனம் பண்ணி பிரசாதம் வாங்கிண்டு  வெளியில வந்ததும், 'ஆசார்யாளை நீங்க ஏன் தரிசனம் பண்ண வரலை?'ன்னு பலரும் அவாகிட்டே கேட்டா.


"இங்கே மடத்துல ஆசார்யா இருக்கார்னதும் அவர்கிட்டே எங்க பிரச்னை ஒண்ணைச் சொல்லி அதுக்குப்  பரிகாரம் ஏதானும் இருக்கான்னு கேட்கலாம்னு நினைச்சுண்டுதான் வந்தோம். இங்கே வந்து பார்த்தா, அவர் ரொம்ப சின்னவரா இருக்கார். இவர்கிட்டே,எப்படி எங்க பிரச்னையைச் சொல்றது? அதுக்கு ஆலோசனை எப்படிக் கேட்கறது? இதெல்லாம் சரிவராதுன்னு தோணித்து. அதான் வெளியில வந்துட்டோம்!" அவா சொல்லிண்டு இருந்த  சமயத்துலயே ஆசார்யாளோட அணுக்கத் தொண்டர் அங்கே வந்தார். 


"இங்கே தீராத வயத்துவலியால தவிக்கற ஒரு மாமி வந்திருக்காளாமே, அவா யாரு? அவாளை  ஆசார்யா அழைச்சுண்டு வரச் சொன்னார்" அப்படின்னார்.


அதைக் கேட்டதுதான் தாமதம், அப்படியே பதறிப்போனா அந்த தம்பதி.


அந்த மாமி கொஞ்சம் தயக்கத்தோட 'எனக்குதான் வயத்துவலி.!' என்று வார்த்தைகளை முடிக்காமல் இழுக்க அந்த தொண்டர் அவசரமா அவாளை கூட்டிண்டு போனார்.


மகாபெரியவா முன்னாலபோய் நின்னா, அந்தத் தம்பதி. இவர் எப்படி என்னோட வயத்துவலியைத் தெரிஞ்சுண்டார்ங்கற மாதிரியான ஆச்சரியம் அந்த மாமி முகத்துல பட்டவர்த்தனமா தெரிஞ்சுது.


"என்ன அடிவயத்தைப் பிசையறாப்புல வலிக்கறதா? டாக்டர்களெல்லாம் அல்சர் ரொம்ப அதிகமாயிடுத்து, தீவிரமா சிகிச்சை பண்ணியாகணும்ணு சொல்றாளா?" அவாகிட்டே கேட்டுண்டே சாத்துக்குடி பழம் ஒண்ணை எடுத்து கையில வைச்சு உருட்டிண்டு இருந்தார் மகாபெரியவா.


"ஆமாம் நேரத்துக்கு சாப்பிடாததால வயத்துல அமிலம் அரிச்சு புண்ணாயிடுத்தாம் . குணப்படுத்தறது ரொம்ப கஷ்டம்னு சொல்றா டாக்டர்கள்.! அடிக்கடி தாங்க முடியாம வலிக்கிறது" சொன்ன அந்த மாமியோட கண்ணுல இருந்து வலி தாங்காம ஜலம் வழியத் தொடங்கித்து.


தான் கையில் வைச்சு உருட்டிண்டு இருந்த சாத்துக்குடியை சட்டுனு அந்த மாமியோட ஆத்துக்காரர்கிட்டே  தூக்கிப் போட்டார் மகாபெரியவா."அதை உடனே உரிச்சுக் குடு..!" கட்டளை மாதிரி சொன்னார்.


ஏதோ ஒரு உத்வேகத்துல அவரும் அந்தப் பழத்தை உரிச்சு ஆத்துக்காரிக்குக் குடுத்தார். தாங்க முடியாத வயித்துவலியில தவிச்சுண்டு இருந்த அந்த மாமி, ஒவ்வொரு சுளையா வாங்கி ஏதோ குழந்தை சாப்பிடறாப்புல சாப்பிட்டு முடிச்சா. இத்தனையும் ஒரு சில நிமிடத்துல நடந்துடுத்து.


அதுக்கு அப்புறம் நடந்துதான் பேரதிசயம்! அதுவரைக்கும் வலியால துடிச்சுண்டு இருந்த அந்த மாமி, இதுவரைக்கும் வலிச்சதெல்லாம் கனவா? நனவா?ங்கற மாதிரி ரொம்பவே சந்தோஷமா பேச ஆரம்பிச்சுட்டா.


"இதுவரைக்கும் என்னை வாட்டிண்டு இருந்த வலி போன இடம் தெரியலை. சாதாரணமா இந்த  வலி வந்துட்டா ரெண்டு மூணு மணி நேரமாவது என்னை வாட்டி வதைச்சுடும். மருந்து எடுத்துண்டாலும் அது வேலை செய்யறவரைக்கும் சகிச்சுண்டு இருக்கணும். ஆனா இப்போ ரொம்பவே ஆச்சரியமா எனக்கு வலி போன இடம் தெரியலை. ஆசார்யா தந்த பழத்தோட முதல் சுளையைத் தின்னதுமே என்னோட வலி குறைய ஆரம்பிச்சுடுத்து. முழுசா தின்னு முடிச்சதும் எனக்கா வலிச்சுதுங்கறமாதிரி பூரணமா நிவர்த்தி ஆயிடுத்து!" வார்த்தைகள் நெகிழ, கண்ணு கசிய சொன்னார் அந்த மாமி. நின்னுண்ட இருந்த அவர் அகத்துக்காரர் மாமி சொல்லி முடிச்ச மறுகணம் அப்படியே சாஷ்டாங்கமாக ஆசார்யா திருவடியிலே விழுந்தார்.


"எங்களை மன்னிச்சுடுங்கோ! இவ்வளவு சின்னவரா இருக்கேளேன்னு நாங்க சந்தேகப்பட்டோம். ஆனா, நாங்க சொல்லாமலே என் ஆத்துக்காரியோட பிரச்னையைத் தெரிஞ்சுண்டு, அது போகறதுக்கு மருந்தாட்டம் ஒரு கனியைப் பிரசாதமாவும் தந்து எங்க கண்ணைத் திறந்துட்டேள்" தழுதழுப்பா சொன்னார்.


மௌனமா ஒரு புன்னகையை மட்டும் பதிலாக்கி அந்தப் பெண்மணிகிட்டே கொஞ்சம் குங்குமப் பிரசாதத்தைக் குடுத்து ஆசிர்வதிச்சார் மகாபெரியவா.


அந்தப் பெண்மணிக்கு தீராத வயத்துவலின்னு ஆசார்யாளுக்கு  எப்படித் தெரிஞ்சுதுங்கறது அதிசயம்னா, அதைவிட பேரதிசயம் ஒரே ஒரு சாத்துக்குடியைத் தந்து அவாளோட வியாதியைப் போக்கினது. இதெல்லாம் சாட்சாத் அந்தப் பரமேஸ்வரனோட  அம்சமான மகாபெரியவாளோட லீலை இல்லாம வேறு என்ன?. 


No comments:

Post a Comment